சாலைகள் அமைப்பதில் கெட்டிக்காரர்.. மத்திய அமைச்சர் 'நிதின் கட்காரி' யின் வாழ்க்கை குறிப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 2வது முறையாக இடம் பெற்றுள்ள முக்கியமான அமைச்சர்களில் ஒருவர் நிதின் கட்காரி. மோடிக்கு அடுத்த இடத்தில் பாஜகவினரால் பார்கப்படுகிறார். இவரது வாழ்க்கை குறிப்புகளை இப்போது பார்த்துவிடலாம்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் நிதின் கட்காரி. இவர் 1957ம் ஆண்டு மே 27 தேதி ஜெய்ராம் கட்காரி மற்றும் பனுதாய் கட்காரி தம்பதிக்கு பிறந்தார். நிதின் ஜெயராம் கட்காரி (முழுபெயர்) நாக்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்காம் மற்றும் எல்எல்பி பட்டம் பெற்றார். படிக்கும் போதே பாரதிய ஜனதா யுவமோர்சா மற்றும் அகில் பாரதிய வித்யார்தி பரிஷித் இயக்கங்களில் பணியாற்றினார்.
இதன் மூலம் மகாராஷ்டிரா பாஜகவில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த நிதின் கட்காரி 1995 முதல் 1999 வரை பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினார்.அத்துடன் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவராகவும் பணியாற்றினார்.
கடவுள் ஆசிர்வாதத்தில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும்... ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி விருப்பம்!!
நிதின் கட்காரி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த 1996-1999 கால கட்டத்தில் தான் மும்பை -புணே இடையே எக்ஸ்பிரஸ் சாலையை இரண்டே வருடங்களில் அமைத்து காட்டினார். இதன் மூலம் மும்பையில் இருந்து புணேவுக்கு 3 மணிநேரத்தில் செல்ல முடிகிறது. நிதின் கட்காரி அமைச்சராக இருந்தபோது மும்பையில் 55 மேம்பாலங்கள் கட்டினார்.இதன் மூலம் மும்பையின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக அன்றே குறையகாரணமாக இருந்தார்.
இதையடுத்து தேசிய அரசியல் களம் கண்ட நிதின் கட்காரி 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்றார். 2013ம் ஆண்டு வரை பாஜக தலைவராக பொறுப்பு வகித்தார். அதன் பிறகு 2014ம் ஆண்டு நாக்பூர் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 5 வருடங்களாக மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் கங்கை தூய்மைப்படுத்துதல் துறை அமைச்சராக பதவி வகித்தார். நிதின்கட்காரி ஒரு நாளைக்கு 2 கிலோமீட்டரில் இருந்து 16 கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிகளை முதல் வருடத்தில் மேற்கொண்டார். அதன்பின்னர் வந்த ஆண்டுகளில் 21 கிலோ மீட்டராகவும், 30 கிலோமீட்டர் என்றும் சாலை போடுவதை அதிகரித்தார். இவரைத்தான் பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் முக்கியதளபதிகளில் ஒருவராக நம்பி இருக்கிறார். இப்போது கட்காரி, பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.