ஹோட்டல்களில் சீன உணவை விற்க தடை விதிக்க வேண்டும்... மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
ஹோட்டல்களில் சீன உணவை விற்க தடை விதிக்க வேண்டும்... மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
மும்பை: நாடு முழுவதும் உணவகங்களில் சீன உணவை விற்க தடை விதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமணம் அடைந்துள்ள நிலையில் அவர் இந்தக் கருத்தை கூறியிருக்கிறார்.
மேலும், சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் சைனீஸ் வகை உணவுகளை மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எங்களை விடுங்க.. நேபாளம் கூட இந்தியாவை மிரட்டும் பாருங்க.. சீன ஊடகத்தின் கொழுப்பு மிரட்டல்!
சீனா அத்துமீறல்
லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் தமிழக வீரர் ஒருவர் உட்பட இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இதனிடையே சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்த நிலையில், தக்க பதிலடி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் எழுந்து வருகின்றன.
உளவுத்துறை
இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளதால் இங்குள்ள சீன நிறுவனங்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும், இதனால் சீன நிறுவனங்கள், தூதரக மையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என மாநில காவல்துறை தலைவர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தது. இதனிடையே சீன அதிபர் ஷி ஜின்பிங் உருவப்படத்தை எரித்து மதுரை பாஜகவினர் தங்கள் கோபத்தை இன்று வெளிப்படுத்தினர்.
ராம்தாஸ் அத்வாலே
இந்த சூழலில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ஹோட்டல்களில் சைனீஸ் உணவு வகைகளான பிரைடு ரைஸ், நூடுல்ஸ், உள்ளிட்டவைகளை விற்க தடை விதிக்க வேண்டும் என்றும், பொதுமக்களும் சீன உணவு வகைகளை புறக்கணிக்க முன் வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் அவர் இதனை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சீன உணவுகள்
பொதுவாக இங்குள்ள ரெஸ்டாரண்ட்களில் சைனீஸ் உணவு வகைகளுக்கு மவுசு அதிகம். அதுவும் குறிப்பாக பாஸ்ட் புட் கடைகள் வீதிக்கு வீதி முளைத்துள்ளதால் பிரைடு ரைஸ், நூடுல்ஸ், உள்ளிட்ட சீன உணவுகளுக்கு மக்கள் மத்தியில் ஒரு வகை ஈர்ப்பு உள்ளது. இந்த வகை உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் என எத்தனையோ முறை மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தும் அதை மக்கள் கேட்டதாக தெரியவில்லை. இப்போது மத்திய அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றாவது மக்கள் சீன உணவை புறக்கணிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.