மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு பாஜகவில் சேர மிரட்டல் தொடருகிறது: சரத்பவார்
மும்பை: மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை பாஜகவில் சேர வலியுறுத்தி தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டியுள்ளார்.
288 எம்.எல்.ஏக்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் அக்டோபரில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 122 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
சிவசேனா 62, காங்கிரஸ் 42, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களைக் கைப்பற்றின. தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
என்சிபி-காங். 240 இடங்கள்
இது தொடர்பாக மும்பையில் சரத்பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் 240 இடங்களைப் பகிர்ந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 48 இடங்கள் பிற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க்கப்பட்டுள்ளன.
கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்
இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 10 நாட்களுக்குள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
எதிர்க்கட்சியினருக்கு மிரட்டல்கள்
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசு தமது ஏஜென்சிகளை முழு வீச்சில் பயன்படுத்தி வருகிறது. பாஜகவில் இணைய மறுக்கும் எதிர்க்கட்சியினருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன.
கூட்டுறவு வங்கிகள் மூலம் வலை
இது மகாராஷ்டிராவில் மட்டுமல்ல.. பிற மாநிலங்களும் நடைபெறுகிறது. இதற்கு மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் அமைச்சர்களும் உடந்தையாக இருக்கின்றனர். மேலும் பாஜகவில் இணைய விரும்பும் எதிர்க்கட்சியினருக்கு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி உள்ளிட்டவைகள் மூலமாக உதவி செய்யவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா நிலவரம்
கர்நாடகாவைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. ஜேடிஎஸ்-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புனேவுக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களை சந்திக்க வந்த கர்நாடகா அமைச்சருக்கும் அனுமதி தரவில்லை. இப்போது புதிய அரசு அமைகிறது. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என பார்க்கலாம். இவ்வாறு சரத்பவார் கூறினார்.