ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு… அமலாக்கத்துறை முன் சந்தா கோச்சார் விசாரணைக்காக ஆஜர்
மும்பை: கடன் முறைகேடு விவகாரத்தில் ஐசிஐசிஐயின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார்.
வீடியோகான் குழுமத்திற்கு ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் விதி முறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் ஆதாயத்துக்காக கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணு கோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், சந்தா கோச்சாருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் சுற்றறிக்கை அனுப்பியது.
இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள சந்தா கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.
இருவரின் வீடுகளிலிருந்து ஆவணங்கள், மின்னணு சான்றுகள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து அதன் விபரங்களை இருவரிடமும் கேட்டுப் பெறுவதற்காக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
வசதியான வண்டி.. குளுகுளு ஏசி.. சொகுசான இருக்கைகள்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் "ரதங்கள்"!
இதையடுத்து, சந்தா கோச்சார் விசாரணைக்காக ஆஜர் ஆனார். அவரிடம் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், அதன் விவரங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், கடன் முறைகேடு தொடர்பான ஆவணங்களைச் சந்தா கோச்சார் அழித்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.