மகாராஷ்டிராவிலும் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. ஓடிவரும் காங்.. என்சிபி தலைகள்... முதல்வர் பதில்
மும்பை: மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பாஜகவில் சேர்ந்து வருவதாக சரத்பவார் குற்றம்சாட்டிய நிலையில், அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மற்றும் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு அந்த கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் பலரும் பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வருமான வரித்துறையின் ரெய்டுக்கு பயந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும காங்கிரஸ் முன்னணி தலைவர்கள பாஜகவில் இணைந்து வருவதாகவும், இதற்கு பாஜகவின் அழுத்தம் தான் காரணம் என்று புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறுகையில், "லோக்சபா தேர்தலுக்கு முன்பு இருந்தே மத்திய அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. பாஜகவில் இணையுமாறு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பலருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இது மகாராஷ்டிராவுடன் முடிந்துவிடாது. நாடு முழுவதும் நடக்கும்" என எச்சரித்துள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாஜகவில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டுமே சேர்ப்போம். வருமான வரித்துறை விசாரணை மற்றும் வேறு ஏதேனும் விசாரணையில் உள்ளவர்களை நாங்கள் சேர்க்க மாட்டோம். நாங்கள் பாஜகவில் சேருமாறு யாரையும் அழைக்கவோ, துரத்தவோ தேவையில்லை. அவர்களாகவே எங்களை அணுகுகிறார்கள்.
கட்சியில் இணையுமாறு பாஜக யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட ஏராளமான சர்க்கரை ஆலைகளுக்கு அரசு உதவியுள்ளது. எங்களுடன் சேருவதாக பலரும் கேட்டுள்ளார்கள். இது தொடர்பாக பெரிய லிஸ்டே உள்ளது. ஆனால் நாங்கள் ஒருவரிடமும் பாஜகவில் சேருமாறு கேட்கவில்லை. சரத்பவார் தன்னுடைய சொந்த கட்சிக்குள் நடப்பது குறித்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.