சுஷாந்த் சிங் வழக்கு: பாஜக ஆபீசுக்கு 53 முறை போன் போட்ட மோடி பட தயாரிப்பாளர் சந்தீப் சிங்- காங்.
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் பிரதமர் மோடி குறித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங்குக்கும் பாஜகவுக்குமான தொடர்பு குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சுஷாந்த்சிங்கின் நண்பரான சந்தீப் சிங் கடந்த சில மாதங்களில் மட்டும் 53 முறை பாஜக அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசியது ஏன் என்பது காங்கிரஸின் கேள்வி.
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது. ஒவ்வொருநாளும் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது சுஷாந்த் சிங் வழக்கு.
இந்த வழக்கு தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சுஷாந்த் சிங்கின் நண்பர்தான் சந்தீப் சிங். 2019 தேர்தலின் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை குறித்த திரைபடத்தைத் தயாரித்தவர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் சந்தீப் சிங், மகாராஷ்டிரா பாஜக அலுவலகத்தை 53 முறை தொடர்பு கொண்டு பேசினார். சந்தீப் சிங் யாரை தொடர்பு கொண்டு தமக்கு பாதுகாப்பு கேட்டார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்.
கால்வன் மோதலுக்குப் பின் தென்சீனா கடற்பரப்பில் இந்திய போர்க்கப்பல்.. சீனாவுக்கு அதிரடி செக்
சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ கையிலெடுத்து வேகமாக விசாரிப்பதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா? என்பதும் தெரியப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அபிஷேக் மனு சிங்வி கூறினார்.
முன்னதாக மககாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள், சந்தீப் சிங்- முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் இணைந்து இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.