குறைந்தபட்ச பொதுசெயல் திட்டம்: உத்தவ் தாக்கரேவுடன் காங். தலைவர்கள் ஆலோசனை
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசுக்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறையில் இருந்து வருகிறது. அதேநேரத்தில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
சிவசேனாவுக்கும் காங்கிரஸ்- என்சிபிக்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் உள்ளன. இதனால் மூன்று கட்சிகளும் ஒரு குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தின் கீழ் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
இதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குழுக்களை அமைத்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் குழுவில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அசோக் சவாண், மாணிக் ராவ் தாக்கரே, பாலாசாகேப் தொராட் உள்ளிட்டோர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினர்.
மும்பையில் ஹோட்டல் ஒன்றில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர்களுடன் குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. என்ன முடிவு எடுத்தாலும் உங்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.
முன்னதாக நேற்று நள்ளிரவில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேலை உத்தவ் தாக்கரே தனியே சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.