ராணுவ ரகசியங்களை வாட்ஸ்-அப்பில் பேசிய விவகாரம்...அர்னாப் கோஸ்வாமி மீது போலீசில் புகார்!
மும்பை: பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து முன்கூட்டியே வாட்ஸ்-அப்பில் உரையாடிய ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது போலீசில் காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது.
அர்னாப் கோஸ்வாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாலகோட் தாக்குதல் குறித்து அவருக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தது யார் என்று அறியப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த் கூறினார்.
பாகிஸ்தானின் பாலக்கோட்டில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
பாலகோட் சம்பவம்
பாகிஸ்தானின் பாலக்கோட்டில் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயிற்சி முகாம் மீது 2019-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி இதுகுறித்து முன்கூட்டியே வாட்ஸ்-அப்பில் இன்னொருவருடன் உரையாடியது சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அர்னாப் கோஸ்வாமி, முன்னாள் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவிடம் ராணுவம் தொடர்பாக உரையாடியதாக தெரிகிறது.
பலர் கண்டனம்
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியும், 'நாட்டின் ராணுவ நடவடிக்கைகளின் அதிகாரபூர்வ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம். இதற்கு யார் காரணம் என்றாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கருணை காட்ட கூடாது என்று கூறினார்.
போலீசில் புகார்
இந்த நிலையில் ரகசியமிக்க நாட்டின் ராணுவ நடவடிக்கையை உரையாடிய அர்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த் மற்றும் சில தலைவர்கள் காந்திவலியில் உள்ள சம்தா நகர் போலீஸ் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இதேபோல் கிழக்கு பாந்தராவில் நிர்மல்நகர் போலீஸ் நிலையத்தில் ரிபப்ளிக் டிவி தொகுப்பாளருக்கு எதிராக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.
கைது செய்ய வேண்டும்
காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த் பின்னர் டுவிட்டரில் கூறுகையில், ஓ.எஸ்.ஏ. பிரிவு 5-ஐ மீறியதற்காக அர்னாப் கோஸ்வாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாலகோட் தாக்குதல் குறித்து அவருக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தது யார் என்று அறியப்பட வேண்டும் என்றார். சம்தா நகர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், டி.ஆர்.பி வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக தாஸ்குப்தா மற்றும் கோஸ்வாமி இடையேயான உரையாடல் உள்ளன. இதில் தாஸ்குப்தா மற்றும் 14 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.