சிறுபான்மையினர் பிரச்சனை-. உறுதி தந்த சிவசேனா... கை கோர்க்கும் காங். என்சிபி
மும்பை: சிறுபான்மையினர் பிரச்சனையில் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை என சிவசேனா உறுதி தந்ததால் அக்கட்சியுடன் இணைந்து புதிய அரசு அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் கூட்டணியில் பல ஆண்டுகள் இருந்த சிவசேனா தற்போது அக்கூட்டணியை முறித்து கொண்டுள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து செயல்பட சிவசேனா முன்வந்துள்ளது.
அதேநேரத்தில் சிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடனே இணையவும் முன்வரவில்லை. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டன
இதனையடுத்து சிவசேனாவுடன் குறைந்தபட்ச செயல்பட்ச திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதற்காக காங்கிரஸ், என்சிபி கட்சிகள் குழுக்களை அமைத்துள்ளன.
இக்குழுக்கள், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தைகளின் போது இடம்பெயர்ந்த மக்கள், தலித்துகள், பழங்குடிகள் மற்றும் சிறுபான்மையினர் தொடர்பான சிவசேனாவின் கடும்போக்கு நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சிறுபான்மையினர் பிரச்சனையில் நாங்கள் கடும் போக்கை வெளிப்படுத்தமாட்டோம். அதனால் எந்த கவலையும் பட தேவையில்லை. நாங்களே கூட முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை வலியுறுத்தியிருக்கிறோம் என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதில் திருப்தி அடைந்த நிலையில்தான் சிவசேனாவுடன் புதிய அரசில் இணையலாம் என காங்கிரஸ் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் தாரின் அன்வார், சிவசேனாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதால் முஸ்லிம்கள் அதிருப்தி அடைய தேவை இல்லை. நமக்கு இப்போதைய தேவை வளர்ச்சிதான். அதை நோக்கி பயணிப்போம் என கூறியுள்ளார்.