காங்கிரஸுடன் எந்த தவறான புரிதலும் இல்லை.. இணைந்தே முடிவெடுப்போம்: என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார்
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் எந்த ஒரு தவறான புரிதலும் இல்லை; இரு கட்சிகளும் இணைந்தே தேர்தலில் போட்டியிடுவோம் என என்சிபி மூத்த தலைவரான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
பாஜகவைத் தொடர்ந்து சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைத்திருந்தார். சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் 2 முறை கூடி நேற்று ஆலோசனை நடத்தியது.
டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரளா காங்கிரஸ் தலைவர்களான ஏ.கே. அந்தோணி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் சிவசேனாவை ஆதரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று இரவு காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேசுவோம் என்று மட்டும் கூறப்பட்டிருந்தது.
90ஸ் கிட் பேச்சை கேட்டு அசிங்கப்பட்ட சிவசேனா.. மகாராஷ்டிராவில் தனித்துவிடப்பட்டது.. இந்த நிலையா!
இதனால் சிவசேனவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆட்சி அமைக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார். அத்துடன் 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள், ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து பேசினர். அக்கட்சி ஆட்சி அமைக்க இன்று இரவு 8.30 மணிவரை ஆளுநர் கெடு விதித்திருக்கிறார். இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வராமல் இருப்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாராமதி எம்.எல்.ஏவும் மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கூறுகையில், எந்த ஒரு முடிவு எடுத்தாலும் இணைந்தே எடுப்போம். ஆகையால் காங்கிரஸ் முடிவுக்காக நேற்று காத்திருந்தோம். ஆனால் அந்த முடிவு எதுவும் வரவில்லை. நாங்கள் தனித்து எந்த முடிவையும் எடுக்கப் போவது இல்லை.
காங்கிரஸுடன் எந்த ஒரு தவறான புரிதலும் எங்களுக்கு இல்லை. இரு கட்சிகளும் இணைந்தே தேர்தலில் போட்டியிட்டோம்; இணைந்தே முடிவுகளை எடுப்போம் என்றார்