குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து ஆலோசிக்க காங், தேசியவாத காங். குழுக்கள் அமைப்பு
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசுக்கான குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குழுக்களை அமைத்துள்ளன.
மகாராஷ்டிராவில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளதாக ஆளுநர் கோஷ்யாரி அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய அரசு அமைப்பதில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகின்றன.
சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதால் பல்வேறு பிரச்சனைகளின் நிலைப்பாடுகள் குறித்து சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பது காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் நிலைப்பாடு. கொள்கை வேறுபாடுகள் கொண்ட கட்சிகள் என்பதால் குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் இணைந்து செயல்படுவோம் என்பது சிவசேனாவின் கருத்து.
இதனையடுத்து புதிய அரசு அமைப்பதற்கு முன்னதாக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குழுக்களை அமைத்துள்ளன.
தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் ஜயந்த் பாட்டீல், அஜித் பவார், சஹன் புஜ்பால், தனஞ்ஜய் முண்டே, நவாப் மாலிக் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியானது அசோக் சவாண், பிரித்விராஜ் சவாண், மாணிக்ராவ் தாக்கரே, பாலாசாகேப் தொராட், விஜய் வதேட்டிவார் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.
இக்குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வந்த பின்னர் சிவசேனாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும்.