நிழல் உலக தாதா கரீம் லாலாவை சந்தித்த இந்திரா காந்தி... சஞ்சய் ராவத் கருத்தால் காங். கடும் அதிருப்தி
மும்பை: மும்பை நிழல் உலக தாதா கரீம் லாலாவை மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சந்தித்தார் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சஞ்சய் ராவத் பேசியதாவது:
மும்பையில் யார் போலீஸ் கமிஷனராக இருக்க வேண்டும் என்பதை ஒருகாலத்தில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல், சரத் ஷெட்டி ஆகிய நிழல் உலக தாதாக்கள்தான் தீர்மானித்தனர். அவர்கள்தான் முதல்வர் யார் என்பதை முடிவு செய்தனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நிழல் உல தாதா கரீம்லாலாவை சந்தித்து பேசியிருக்கிறார். அந்த நிழல் உலக தாதாக்கள் இப்போது இல்லை. இவ்வாறு சஞ்சய் ராவத் பேசினார்.
அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மிலிந்த் தியோரா கூறுகையில், இந்திரா காந்தி அம்மையார் உண்மையான தேசபக்தர். தேசத்தின் பாதுகாப்பில் ஒருபோதும் அவர் சமரசம் செய்து கொண்டது கிடையாது. முன்னாள் மும்பை காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அடிப்படையில் சஞ்சய் ராவத் தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மாறுகிறது ரஷ்ய அரசியலமைப்பு.. ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வியும் சஞ்சய் ராவத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமது கருத்து தொடர்பாக சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எப்போதும் மரியாதை வைத்திருக்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்த போதும் பிரச்சனைகளின் அடிப்படையில் இந்திராவை ஆதரித்திருக்கிறேன்.
கரீம் லாலா ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த பதான் சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால் அச்சமூகத்தினரின் கோரிக்கைகளை கேட்பதற்காக பலரும் அவரை சந்தித்தனர் என விளக்கம் தந்துள்ளார் சஞ்சய் ராவத்.