என்ன.. நாங்கள் இல்லாமல் பா.ஜ.க.வை தோற்கடிக்க போறீங்களா.. மம்தாவை கலாய்த்து தள்ளிய காங்கிரஸ்!
மும்பை: திரிணாமுல் காங்கிரசை தேசிய அளவில் கொண்டு வர விரும்புகிறார் இந்த கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி. பாஜகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக வலம் வர விரும்புகிறார்.
இதற்கான வேலைகளில் மம்தா பானர்ஜி இறங்கி விட்டார். இதற்காக காங்கிரஸ் அல்லாத பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் அவர். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் மையம் கொண்டுள்ள மம்தா எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
சரத் பவாருடன் சந்திப்பு
சிவசேனா தலைவர்கள் ஆதித்யா தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோரை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து இன்று மாலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டியளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது:- காங்கிரஸ் தலையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யு..பி.ஏ) இப்போது இல்லை.
பாஜகவை தோற்கடிப்பது எளிது
இந்த நாட்டை விட்டு அரசியல்ரீதியாக பாஜகவை பார்க்க விரும்புகிறேன். வங்காளத்தில் காங்கிரஸ் போட்டியிடும் பட்சத்தில், கோவாவில் நான் ஏன் போட்டியிட முடியாது? களத்தில் நின்று பிஜேபிக்கு எதிராக போராடுவது முக்கியம், இல்லையெனில் கஷ்டம்தான். அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்றாக இருந்தால் பாஜகவை தோற்கடிப்பது எளிது. மாநிலத்தில் விஷயங்கள் நன்றாக இருந்தாலும், மற்றவர்களும் வெளியேறவும், போட்டி இருக்கவும் நான் வங்காளத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
சரத் பவார் சொல்வது என்ன?
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய சரத் பவார், ' பாஜகவை எதிர்க்கும் அனைவரும் எங்களுடன் இணைவதை வரவேற்கிறோம். யாரையும் ஒதுக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. பாஜகவுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தற்போது நிலவும் சூழல் குறித்தும், ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வுக்கு வலுவான மாற்றை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதித்தோம். தலைவர் யார் என்ற கேள்வி இப்போதைக்கு எழவில்லை' என்று கூறினார்.
காங்கிரஸ் கண்டனம்
இதற்கிடையே தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இல்லை என்ற மம்தாவின் கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்திய அரசியலின் யதார்த்தம் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் இல்லாமல் யாராலும் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று நினைப்பது வெறும் கனவு' என்று அவர் கூறியுள்ளார்.