மகாராஷ்டிராவில் 26 இடங்களில் காங்கிரஸ்... 22 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் போட்டி
மும்பை: நீண்ட இழுபறிக்குப் பிறகு மகாராஷ்டிராவில் 26 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 22 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் மும்பையில் இதனை கூட்டாக அறிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இருதரப்பினரும் ஏற்கெனவே பேசியபடி காங்கிரஸ் கட்சி 26 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 22 இடங்களிலும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட 22 இடங்களில் இருந்து ஒரு இடத்தில், அதாவது நாசிக் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட விட்டுக்கொடுக்க சரத்பவாருடன் பேச்சு நடத்தப்பட்டது. இதனால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததாக தெரிகிறது.
குறிப்பாக, மேற்கு வங்கம், பிஹார், டெல்லி ஆகிய 3 மாநிலங்களிலும் தொகுதி பங்கீட்டில் ஆமை வேகத்தில் காங்கிரஸ் நடந்து கொள்வதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், பல மாநிலங்களில் கூட்டணி குறித்த பேச்சை இன்னும் இறுதி செய்யாமல் காங்கிரஸ் கட்சி மந்தமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பிரதான கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.