சட்ட நடவடிக்கை மிரட்டல் வந்தாலும் ராஜினாமா முடிவில் மாற்றமில்லை.. காங்., மஜத எம்எல்ஏக்கள் அறிவிப்பு
மும்பை: சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்தாலும் கூட, எங்களது முடிவில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரசை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மஜதவை சேர்ந்த 3 பேரும் ராஜினாமா செய்துள்ளதால் ஆட்சிக்கு கிடைத்த ஆதரவு எம்எல்ஏக்களில் 14 பேரை இழக்கும் சூழ்நிலை வந்துள்ளது.
இந்த நிலையில்தான், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சபாநாயகரிடம் சட்டப்பேரவைக் குழுத் தலைவரான சித்தராமையா இன்று மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில், மும்பை ஹோட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பிரதாப் பாட்டில், பிசி பாட்டில், சோமசேகர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ நாராயணன் கவுடா உள்ளிட்டோர் தனித்தனியாக அளித்துள்ள பேட்டியில், இதுபோன்ற மிரட்டலுக்கு நாங்கள் பணிய மாட்டோம். எங்களது ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறோம். எங்களது தொகுதிக்கு இந்த அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்பதற்காக ராஜினாமா செய்துள்ளோமே தவிர, எந்த ஒரு கட்சியுடனும் நாங்கள் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
Congress leader ST Somashekhar in Mumbai: Total 10 MLAs (Congress-JDS) have submitted their resignation to Speaker&Karnataka Governor. We are still in Congress party but resigned from MLA post.We're not expecting any minister post. People of Karnataka don't like 'Maitri' govt'. pic.twitter.com/ncpiZ5VSYI
— ANI (@ANI) July 9, 2019
எனவே, கர்நாடக அரசியல் பிரச்சினை இப்போதைக்கு தீருவதை போல தெரியவில்லை. இதனிடையே, நிலவரம் மோசமாகிக் கொண்டே இருப்பதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் பிகே ஹரி பிரசாத் ஆகியோர் இன்று அவசரமாக பெங்களூரு விரைகின்றனர்.