உரசிக் கொள்ளும் மகாராஷ்டிரா அரசும்... அர்னாப் கோஸ்சுவாமியும்... தொடரும் சர்ச்சை!!
வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும், விளம்பரத்திற்காகவும் மும்பையில் இருக்கும் மூன்று தனியார் டிவி சேனல்கள் போலி டிஆர்பி முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம் பீர் சிங் இன்று தெரிவித்து இருந்தார். இந்த முறைகேடு தொடர்பாக விரைவில் ரிபப்ளிக் டிவி சேனல் உரிமையாளர் அர்னாப் கோஸ்சுவாமியும் விசாரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தக் குற்றச்சாட்டில், இந்திய தண்டனைச் சட்டம் 120B, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் டிவி சேனல்கள் முறைகேடு செய்து இருப்பதை பார்வையாளர்கள் ஆராய்ச்சி ஒலிபரப்பு கவுன்சில் கொடுத்த தகவலின் அடிப்படையில் தெரிய வந்து இருந்து இருப்பதாக பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.
டிஆர்பி மோசடி.. ரிபப்ளிக் டிவி உள்பட 3 சேனல்கள் மீது வழக்கு.. மும்பை கமிஷ்னர் பரபர பேட்டி
சலுகை
இதுகுறித்து இன்று மும்பையில் பேட்டியளித்து இருந்த பரம் பீர் சிங், ''பார்வையாளர்கள் ஆராய்ச்சி ஒலிபரப்பு கவுன்சிலில் இருந்து எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சாட்சியங்களை சேகரித்து வருகிறோம். சலுகை மற்றும் உரிமை மீறல் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரேட்டிங்
மோசடி மூலம் ரேட்டிங்கை உயர்த்தி அதன் மூலம் வருமானம் பெற்று இருந்தால் அது குற்றம்தான். அதுகுறித்தும் விசாரணை மேற்கொள்வோம். இன்னும் எங்களுக்கு மூன்று மாதங்கள் இருக்கிறது. நாங்கள் மூன்று சாட்சியங்களை விசாரணைக்கு அழைத்து இருக்கிறோம். அவர்களுக்கு குறிப்பிட்ட சேனலை மட்டுமே பார்க்குமாறு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
நேர்மை
யார் மீதும் பழி வாங்கும் எண்ணம் இல்லை. எங்களுக்கு கிடைத்து இருக்கும் தகவல்கள், புகார்கள் அடிப்படையில் புகாரை பதிவு செய்து இருக்கிறோம். சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கிலும் எங்களுடைய விசாரணை நேர்மையாக இருந்தது. உச்ச நீதிமன்றமும் இதை அங்கீகரித்து இருந்தது. டிஆர்பி வழக்கிலும் எங்களது விசாரணை நேர்மையாக இருக்கும்'' என்றார்
நீதிமன்றம்
இவரது பேட்டியை அடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் ரிபப்ளிக் டிவியின் தலைமை எடிட்டர் அர்னாப் கோஸ்சுவாமி, ''மும்பை போலீஸ் கமிஷனருக்கு எதிராக வழக்கு தொடுப்பேன். என் மீது பொய் புகார்களை தெரிவித்துள்ளார். நான் அவரை சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் கேள்வி கேட்டு இருந்தேன். ஆதலால், இந்த பொய் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் பொது அவையில் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் எங்களை அவர் எதிர்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே
நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அர்னாப் தாக்கிப் பேசி வந்தார். இதையடுத்து, இந்த வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அர்னாப் கோஸ்சுவாமிக்கு கடிதம் எழுதி இருந்தது. இதற்கு முன்னதாக பால்கரில் நடந்த சாமியார் கொலை வழக்கிலும் மகாராஷ்டிரா அரசுக்கும், அர்னாப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தக் கொலை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அர்னாப் இணைத்துப் பேசி இருந்தார்.
செய்தியாளர்
இந்த வழக்கின் போக்கை அர்னாப் திசை திருப்புவதாக மீண்டும் மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. இதற்கிடையே, அந்த மாநிலத்தில் உத்தரவின் பண்ணை வீட்டிற்குள் நுழைய ரிபப்ளிக் டிவி சேனல் செய்தியாளர் மற்றும் புகைப்படக்காரர் முயற்சித்தாகக் கூறி அவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இப்படி தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு மற்றும் அந்த மாநில போலீஸ் தலைமையுடன் அர்னாப்புக்கு புகைச்சல் தொடருகிறது. இது தற்போது டிஆர் பி ரேட்டிங்கில் வந்து முடிவடைந்துள்ளது.