கொடுமைதான்.. உத்தவ் தாக்ரே முதல்வர் பதவிக்கே வேட்டு வைத்த கொரோனா.. ஆளுநர் மட்டுமே காப்பாற்ற முடியும்
மும்பை: கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக, எத்தனையோ வகையான பிரச்சனைகளை உலகம் சந்தித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் இது முதல்வர் பதவிக்கே, ஆபத்தாக மாறி உள்ளது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால், அது தான் தற்போது எதார்த்தமாக மாறியுள்ளது.
மகாராஷ்டிராவில், பாஜக, சிவசேனா ஆகியவை ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது களம் கண்டன.
இன்னும் 1 மாதம்தான்.. கொரோனாவிற்கு இடையே முதல்வர் பதவிக்கு சிக்கல்.. மோடிக்கு போன் போட்ட உத்தவ்!
இதில், பாஜக, சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும், எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் முதல்வர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என்று சிவசேனா போர்க்கொடி உயர்த்தியது.
மாறிய கூட்டணி
இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை என்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலுக்குப் பிந்தைய ஒரு கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
சட்டம் என்ன சொல்கிறது?
முதல்வராகவோ, அமைச்சராகவோ பதவியேற்ற ஒருவர், எம்எல்ஏ அல்லது எம்எல்சி என்ற பதவியில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முதல்வராக பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள், இதில் இரண்டில் ஒரு பதவியை அவர் பெற வேண்டும். தமிழகம் போன்ற மாநிலங்களில் எம்எல்சி அதாவது மேலவை உறுப்பினர் என்ற பதவி கிடையாது. இங்கு இடைத் தேர்தலில் போட்டியிட்டால் மட்டுமே முதல்வராகவோ, அமைச்சராகவோ தொடர முடியும். ஆனால் மகாராஷ்டிராவில் மேலவை இருப்பதால், எம்எல்ஏக்கள், சேர்ந்து, எம்எல்சியை தேர்ந்தெடுக்க முடியும்.
ராஜினாமா
இப்படிச் செய்தால், உத்தவ் தாக்ரே, முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால், கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக, மேலவை தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே, அரசியல் சாசன சிக்கல் எழுந்துள்ளது. இப்போது முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பதவியேற்க வேண்டும். முதல்வர் ராஜினாமா செய்தால் மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ததாக அர்த்தம். எனவே, மொத்த அமைச்சரவையும் மீண்டும் பதவியேற்க வேண்டும். இப்படி சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவதை தவிர வேறு ஒரு வழியும் இருக்கிறது.
அமைச்சரவை பரிந்துரை
அது என்ன வழி என்றால், நியமன உறுப்பினர் என்ற அந்தஸ்தை ஆளுநர் நினைத்தால் உத்தவ் தாக்கரேவுக்கு கொடுக்கமுடியும். ஆளுநரால் நியமிக்கப்படக் கூடிய மேலவை நியமன உறுப்பினராக உத்தவ் தாக்ரேவை நியமிக்க வேண்டும் என்று அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்தது அரசு. ஏப்ரல் 9ஆம் தேதி இந்த பரிந்துரை ஆளுநர் பகத்சிங் கோஷாரிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஒரே வழி
இதனிடையே, நேற்று முன்தினம் மறுபடியும் ஒரு முறை அமைச்சரவை தனது பரிந்துரையை அனுப்பியது. ஆனால் அமைச்சரவை முடிவின் மீது எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறார் ஆளுநர். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் உத்தவ் தாக்கரே. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக அப்போது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விஷயத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காவிட்டால், முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அமைச்சரவையுடன் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும். கொரோனா வைரஸ் பிரச்சினை, எத்தனையோ பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தாலும், மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியையே ஆட்டம் காண வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.