3 மாதம்தான்.. முகத்தில் ஒரு அமைதி.. சரியான திட்டமிடல்.. மகாராஷ்டிராவிற்கு கொரோனா தந்த ஹீரோ.. உத்தவ்!
மகாராஷ்டிராவில் முதல்முறை முதல்வராகி இருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அங்கு கொரோனாவிற்கு எதிராக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்முறை முதல்வராகி இருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அங்கு கொரோனாவிற்கு எதிராக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கொரோனாவிற்கு எதிராக அங்கு உத்தவ் எடுக்கும் நடவடிக்கைகள் மக்களின் பாராட்டுகளை பெற்று இருக்கிறது.
மூன்று மாதத்திற்கு முன் உத்தவ் தாக்கரேவை சூப்பர் ஹீரோ என்று சொல்லி இருந்தால் பலர் அதை எதிர்த்து இருப்பார்கள். ஏன் மகாராஷ்டிராவை சேர்ந்த மண்ணின் மைந்தர்களே கூட அதை எதிர்த்து இருப்பார்கள். ஏனென்றால் சிவசேனாவின் அரசியல் வரலாறு அப்படிப்பட்டது.
ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. மகாராஷ்டிராவில் சூப்பர் ஹீரோவாக, மிக சிறப்பான தலைவராக உருவெடுத்து இருக்கிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே.
மூன்று மாதம்தான் ஆகிறது
மகாராஷ்டிராவில் நவம்பர் இறுதியில்தான் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று வெறும் 3 மாதத்தில் மகாராஷ்டிராவில் மார்ச் தொடக்கத்தில் கொரோனா தாக்கியது. ஆட்சிக்கு வந்த சில நாட்களில், எந்த அனுபவமும் இன்றி இருக்கும் எந்த முதல்வராக இருந்தாலும் கொரோனாவை பார்த்து கலங்கி இருப்பார்கள். ஆனால் முதல் முறை முதல்வராக பதவி ஏற்று இருக்கும் உத்தவ் தாக்கரே கொரோனாவை பார்த்து பயப்படவில்லை. அவர் கொரோனாவை எதிர்கொள்ளும் விதத்தை பார்த்து மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் வாயை பிளந்து இருக்கிறார்கள்.
மிகவும் அமைதியான செயல்பாடு
அமைதி - வெளிப்படைத்தன்மை - தெளிவு இதுதான் உத்தவ் தாக்கரேவின் ஸ்டைல். மகாராஷ்டிராவில் கொரோனா வந்த நாளில் இருந்து உத்தவ் தாக்கரே தினமும் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். தினமும் 7 - 8 நிமிடங்கள் அவர் செய்தியாளர்களை சந்திக்கிறார். அவருக்கு அனுபவம் இல்லை, ஒன்றும் தெரியாது, புதிய ஆள் என்று வந்த விமர்சனங்களை எல்லாம் இந்த பேட்டிகளின் மூலமும் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகள் மூலமும் அடித்து நொறுக்கி இருக்கிறார் உத்தவ் தாக்கரே.
தலைவர் எப்படி இருக்க வேண்டும்
கொரோனாவை பார்த்து கலக்கம் அடையாமல், மிகவும் அமைதியாக, தெளியான திட்டத்தோடு அதை எதிர்கொள்கிறார். மிக இக்கட்டான சூழ்நிலையை கூட எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற அறிவு இவரிடம் இருக்கிறது. உதாரணமாக இவர் முதலில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பலர் கூடியதால், மறுநாளே செய்தியாளர் சந்திப்பை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்த தொடங்கினார். இவரை பார்த்துதான் கேரளாவும், மத்திய அரசும் வீடியோ கான்பிரன்ஸ் செய்ய தொடங்கினார்கள்.
தலைவருக்கான அடிப்படை
ஒரு தலைவர் என்பவர் மோசமான நேரத்தில், இக்கட்டான சூழ்நிலையில் டென்சன் ஆகாமல், அமைதியாக முடிவுகளை எடுக்க வேண்டும். இதை மிக நேர்த்தியாக கையாண்டு வருகிறார் உத்தவ் தாக்கரே. தினமும் சோஷியல் மீடியா மூலம், கொரோனா குறித்த வீடியோக்களை அப்டேட் செய்து, மக்களுக்கு விளக்கங்களை அளித்து வருகிறார். அதே சமயம் அரசு பக்கம் இருக்கும் தவறுகளையும், மருத்துவமனைகளில் இருக்கும் குறைகளையும் பல இடங்களில் இவர் ஒப்புக்கொண்டார்.
மகாராஷ்டிராவில் முதல் ஆளாக செய்தார்
இந்தியா முழுக்க 3 நாட்களுக்கு முன்புதான் மொத்த லாக் டவுன் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே மார்ச் 16ம் தேதியே பாதி லாக் டவுனை அறிவித்தார் உத்தவ் தாக்கரே. அதோடு மக்களை லாக் டவுனுக்கு தயார் செய்யும் வகையில் கொஞ்சம், கொஞ்சமாக லாக் டவுன்களை அதிகரித்தார். 16-22 வரை 6 நாட்களில் வரிசையாக லாக் டவுனை அதிகரித்தார். இதனால் அங்கு மக்கள் லாக் டவுனுக்கு தயார் ஆக முடிந்தது.
டிவிட் செய்தார்
முதலில் 4 முக்கிய நகரம், அதன்பின் நகராட்சி, பின் ஊராட்சி என்று லாக் டவுன்களை கொண்டு சென்றார். பிரதமர் மோடி ஒரே இரவில் லாக் டவுன் அறிவித்ததால் இந்தியா முழுக்க மக்கள் அதிகம் கஷ்டப்பட்டனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் மகாராஷ்டிராவில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கனவே அதற்கு தயார் ஆகிவிட்டார்கள். அதோடு, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்று மோடி பேச்சு முடிந்த உடனேயே பேட்டி கொடுத்து, உத்தவ் தாக்கரே மக்களை சாந்தப்படுத்தினார்.
முதல் நபராக தடுத்தார்
அதேபோல் மிக முக்கியமாக கொரோனா காரணமாக மும்பையில் இருந்து வெளிமாநில பணியாளர்கள் பலர் வெளியேற்றப்பட்டனர். பலர் இதில் துன்பறுத்தப்பட்டனர். ஆனால் அவர்களை எல்லாம் மாநிலத்திலேயே இருக்கும்படி கூறினார் உத்தவ் தாக்கரே. ஒரு காலத்தில் வந்தேறிகளை விரட்டி அடிப்போம் என்று கூறிய அதே உத்தவ் தாக்கரேதான் தற்போது மிகவும் அமைதியாக, இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
சிறப்பாக செய்தார்
அதோடு கொரோனாவிற்கு எதிராக நான் தனி நபராக பணிகளை செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்ட உத்தவ் தாக்கரே. பணிகளை பிரித்துக் கொடுத்தார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களை மொத்தமாக திரட்டி மாநிலம் முழுக்க அனுப்பி அவர்களுக்கு பணிகளை பிரித்து கொடுத்தார். அதேபோல் மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து அதிகாரிகள் என்று எல்லோருக்கும் சக்தியை பிரித்து கொடுத்தார். அவர்களுக்கு மாவட்ட நிலையை பொறுத்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை அளித்தார்.
முழுதாக தயார் செய்தார்
அதேபோல் மாநிலம் முழுக்க இவர்களின் உதவியுடன் மருத்துவமனைகளை தயார் செய்தார். அங்கு இதுவரை 2000 பேருக்கு மேல் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் கொரோனா சோதனை செய்த மாநிலங்களில் மகாராஷ்டிரா இரண்டாம் இடம் வகிக்கிறது. அதற்கு உத்தவ் தாக்கரேவின் சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாடு ஆகியவைதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
மூன்று கட்சிகள் கூட்டணி
உத்தவ் தாக்கரேவிற்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்குவதற்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் உள்ளது. இதுவும் கூட அவருக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக மாறி உள்ளது. தலைமை பண்பு என்பது ஒரு இடத்தில் குவிந்து இருப்பது இல்லை.. அது பரவி இருப்பது ஆகும். அதை மிக சரியான உணர்வு கொண்டு எல்லோருக்கும் முடிவு எடுக்கும் அதிகாரத்தை வழங்கி.. கொரோனா காலத்தில் சிறந்த ரோல் மாடலாக மாறியுள்ளார் உத்தவ் தாக்கரே!