மகாராஷ்டிரா: மீண்டும் அதிகரிக்கும் கேஸ்கள்..3-வது அலைக்கு அச்சாரமா?..அதிகாரிகளுக்கு முதல்வர் அலர்ட்
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் மீண்டும் 10,000-க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஓரளவு குறைந்து சற்று ஆறுதல் அளித்து வரும் நிலையில் 3-வது அலை வந்து விடுமோ என்ற சூழல் உருவாகி பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் இரண்டாவது அலைக்கு காரணமான டெல்டா வைரஸ் மாறுபாடு அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - 2,91,28,267 பேர் குணமடைந்தனர்
அதிகரிக்கும் கேஸ்கள்
டெல்டா பிளஸ் வைரஸ் முதன் முதலில் மகாராஷ்டிராவில் தான் கண்டறியப்பட்டது. அங்கு மட்டும் டெல்டா பிளஸ் வைரசின் 21 கேஸ்கள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் திடீரென அதிகரித்து வரும் கேஸ்கள் மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,844 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 197 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடும் எச்சரிக்கை
ஜூன் 16 அன்று மாநிலத்தில் 10,107 வழக்குகள் பதிவாகி இருந்தன. அதன் பின்னர் தினசரி எண்ணிக்கை 10,000 க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் மீண்டும் 10,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகின. 2-4 வாரங்களில் மாநிலத்தில் மூன்றாவது அலைக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்று மாநில கொரோனா பணிக்குழு தெளிவுபடுத்தியுள்ள நிலையில், எதிர்பார்த்ததை விட முன்னதாக 3-வது அலை வந்தால் மாநிலம் தயாராக இருக்க வேண்டும் என்று கொரோனா பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
11 மாவட்டங்கள்
சிந்துதுர்க் (1.21%), ரத்னகிரி (0.97%), கோலாப்பூர் (0.79%), சாங்லி (0.57%), சதாரா (0.40%), ராய்காட் (0.39%), பால்கர் (0.24%), சோலாப்பூர் (0.21%), அகமதுநகர் ( 0.19%), பீட் (0.19%), உஸ்மானாபாத் (0.17%) ஆகிய 11 மாவட்டங்கள் அதிக பாஸிடிவ் ரேட் விகிதத்தை நோக்கி சென்று அபாய மணியை அடிக்கிறது. இந்த நிலையில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் எந்த அவசரமும் காட்டக் கூடாது என்று மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் உத்தரவு
குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், சதாரா, சாங்லி, கோலாப்பூர் மற்றும் ஹிங்கோலி மாவட்டங்களின் அதிகாரிகளிடம் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகள், ஐ.சி.யூ சிகிச்சை படுக்கைகள் முன்கூட்டியே தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டார். ஒவ்வொரு மாவட்டமும் ஆக்ஸிஜன், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு உள்ளதா? என்பதை தெரியபடுத்த வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.