ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்: விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பைக்கு வரும் உயிர் காக்கும் ஆக்சிஜன்
மும்பையில் இருந்து முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்
மும்பை: ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. 7 காலி டேங்கர்களுடன் விசாகப்பட்டினத்திற்கு சென்றுள்ள இந்த சிறப்பு ரயில் மூலம் உயிர்காக்கும் திரவ ஆக்சிஜன் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது.
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் இந்த டேங்கர் ரயில்கள் இன்று முதல் தங்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளன. மும்பையில் இருந்து முதல் ரயில் விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுள்ளது.
கொரோனா தீவிரமாக பரவுகிறது... இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை
கொரோனா பரவல்
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் தவிப்பு
நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு ரயில்வே துறையின் உதவியை மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் நாடின. அத்துடன், திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் சிலிண்டர்களை எடுத்து வருவதற்காக சரக்கு ரயில்களை இயக்க கோரிக்கை வைத்தன.
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் பயணம்
நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டும் பல மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ரயில்வே துறை சிறப்பு சரக்கு ரயில்களை இயக்க முடிவு செய்தது. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் இந்த டேங்கர் ரயில்கள் இன்று முதல் தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளன.
7 காலி டேங்கர்கள்
மும்பை கலாம்போலி, பொய்சார் ரயில் நிலையங்களில் இருந்து காலி டேங்கர் ரயில்கள், ஆக்சிஜனை ஏற்றி வருவதற்காக விசாகப்பட்டிணம், ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா, பொகாரோ போன்ற இடங்களுக்கு விரைகின்றன. முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மும்பையில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. 7 காலி டேங்கர்களுடன் மும்பையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு ரயில்கள் சென்றுள்ளன.
ஆக்சிஜன் உற்பத்தி
நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களும், அதனை நிரப்பும் இடங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்திருப்பதோடு, ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதை உறுதி செய்யவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் மூலம் நாட்டின் எந்த பகுதியில் ஆக்சிஜன் தேவைப்பட்டாலும் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. சில நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.