அணை உடைப்புக்கு நண்டுகள்தான் காரணம்.. அமைச்சர் பேச்சு.. நண்டுகளை கைது செய்ய கோரும் எதிர்க்கட்சிகள்!
மும்பை: அணை உடைந்ததற்கு நண்டுகள் தான் காரணம் என மகாராஷ்டிரா அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.
தொடர்ந்து கொட்டிய கனமழையால் ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் தாலுகாவில் உள்ள அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. கடந்த 3-ந் தேதி இரவு கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் அணை திடீரென உடைந்தது.
23 பேர் மாயம்
இதனால் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்தது. அந்த கிராமங்களை சேர்ந்த 12 வீடுகளை வெள்ளம் அடித்து சென்றது. ஆர்ப்பரித்து சென்ற வெள்ளத்தில் 23 பேர் அடித்து செல்லப்பட்டனர்.
அமைச்சர் பேச்சு
அவர்களில் 18 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த், அணை உடைந்ததற்கு நண்டுகள்தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
நண்டுகள் தான் காரணம்
அணையில் அதிகளவில் நண்டுகள் இருந்ததால் அணை பலவீனம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார். இதனைத் தொடர்ந்து சில தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
8 மணி நேரத்தில் 8 மீட்டர் உயர்வு
மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 8 மணி நேரத்தில் 19 சென்டி மீட்டர் மழை பெய்ததாக தெரிவித்த அமைச்சர் இதனால் 8 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 8 மீட்டர் வரை உயர்ந்ததாக கூறினார்.
நண்டுகள் எப்படி காரணம்?
அமைச்சரின் இந்த பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது. அரசின் அலட்சியமே அணை உடைப்புக்கு காரணம் என கூறியுள்ள எதிர்க்கட்சிகள் நண்டுகளால் எப்படி அணை பலவீனம் அடையும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
நண்டுகள் மீது பழி போடுகிறார்
மேலும் அணையை கட்டிய ஒப்பந்ததாரரை விட்டுவிட்டு அமைச்சர் தானாஜி சாவந்த் அப்பாவி நண்டுகள் மீது பழி போடுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அணை உடைப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நண்டுகள் மீது கொலைவழக்கு
இதனிடையே தேசியவாத கட்சியின் மூத்த தலைவரான ஜிதேந்திர அவாத் நேற்று தனது ஆதரவாளர்களுடன் மும்பை நவ்பாடா காவல் நிலையத்திற்கு நண்டுகளுடன் வந்தார். அணை உடைப்புக்கு காரணமான நண்டுகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவற்றை கைது செய்யுமாறு அவர் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தார்.