Cyclone Nisarga: 100 கிமீ வேகத்தில் கரையை கடந்தது நிசர்கா புயல்.. வீழ்ந்த மரங்கள்.. வெளுத்த கனமழை
மும்பை: அரபிக் கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல் மும்பை அருகே ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது
Recommended Video
இந்த புயலால் மும்பை நகரில் முழு உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பைக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் வடக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புதன்கிழமையான, ஜூன் 3ம் தேதி, அதிகாலை நிலவரப்படி, மும்பையில் ராய்காட் மாவட்டத்தில் அலிபாகிலிருந்து தெற்கு பகுதியில் 140 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது
ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பம், கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை
பயங்கர காற்று, கடல் அலைகள்
இந்த புயல், மும்பையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அலிபாக் (Alibaug) என்ற பகுதியில் 1 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. மாலை 5 மணி அளவில் கரையை கடந்தது. இதனால் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. காற்றின் வேகத்தால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. விளம்பர பலகைகள், மேற்கூரைகள் தூக்கி வீசப்படுகின்றன. குஜராத்தையும் புயல் பாதிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டராக, காற்றின் வேகம் இருக்கும். மும்பை மற்றும் மகாராஷ்டிரா கடல் பகுதிகள் பலவற்றில் சுமார் 6.5 அடிக்கு மேல் கடலலை எழும் என்று எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது. இதன்காரணமாக மும்பை கடலோர பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
பாதுகாப்பான இடங்களில் மக்கள்
புயல் கரையை கடந்ததை முன்னிட்டு மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் உட்பட சுமார் 10,000 பேர் முன்னதாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.. கொரோனா வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை மாநகரத்தில், புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் அங்கு முழு உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆலோசனை நடத்திய பிரதமர்
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு புயல் பாதிப்பு நிலவரம் தொடர்பாக கேட்டறிந்தார். டாமன் டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பகுதிகளில் நிர்வாகிகளுடனும், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மும்பை நகர மக்கள் புதன்கிழமை எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரவேண்டாம். வீடுகளுக்குள்ளேயே இருங்கள். இதுவரை பார்த்ததிலேயே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புயலாக இது இருக்கக்கூடும். ஊரடங்கு தளர்வு என்பது வாபஸ் பெறப்பட்டு, அடுத்த இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு நிலை மும்பையில் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
பேரிடர் மீட்புப் படை
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடல் பகுதிகளில் 30 பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 45 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் அவர்கள் அங்கு விரைந்துள்ளனர். மரங்கள் விழுவது, நிலச்சரிவு மற்றும் கடுமையான மழைப்பொழிவு ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்காக அரசு இயந்திரம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை, மும்பையில், திறக்கப்பட்டுள்ளது. ராணுவம், விமானப்படை, மற்றும் கடற்படை ஆகியவற்றின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து புயல்கள்
இதனிடையே குஜராத் மாநிலத்தில் 47 கடலோர கிராம பகுதிகளில் இருந்து 20,000 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படை கப்பல்கள், அரபிக் கடலில் ரோந்து சுற்றி வந்த வண்ணமிருக்கின்றன. மீனவர்கள் மற்றும் வணிகக் கப்பல்களை உடனடியாக கரைக்கு திரும்பி செல்லுமாறு எச்சரிக்கை பிறப்பித்து வருகின்றனர். இரண்டு வாரங்களுக்குள் இந்தியா எதிர்கொள்ளும் இரண்டாவது புயல் இதுவாகும். கடந்த மாதம் அம்பன் புயல், வங்க கடலில் உருவாகி மேற்குவங்கத்தில் கரையை கடந்தது. கொல்கத்தா நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்போது, ஒரு நூற்றாண்டுக்கு பிறகு முதல் முறையாக, ஜூன் மாதத்தில் முதல் முறையாக ஒரு புயல் மும்பையை தாக்கியது குறிப்பிடத்தக்கது.