'முரளிதரன்' படத்தில் ஈழத் தமிழர் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் இல்லை தயாரிப்பாளர் விளக்கம்
மும்பை: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வரலாற்றுத் திரைப்படத்தில் ஈழத் தமிழர் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளரான தார் மீடியா விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தார் மீடியா நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கை: முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம்.
800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதையம்சம்.
முரளிதரன் சினிமா-விஜய்சேதுபதி முடிவெடுக்காவிட்டால் எதிர்வினையை உலகத் தமிழினம் அளிக்கும்: வேல்முருகன்
நம்பிக்கையை தரும் படம்
இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளைக் கடந்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும்.
ஈழத் தமிழர் போராட்ட காட்சிகள்
இத்திரைப்படத்தில் ஈழத் தம்மிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது. கூடுதலாக இத்திரைப்படத்தில் இலங்கையைச் சேர்ந்த பல தமிழ்த் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற இருக்கின்றனர்..
ஈழத் தமிழ் கலைஞர்கள்
அதன் மூலம் இலங்கை தமிழ்த் திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள் திறமையை உலக அரங்கில் வெளிக்காட்ட இந்த படம் நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டுத் தரும் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது.
அன்பும் நம்பிக்கையும்
எல்லைகளைக் கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பதுதான் கலை. நாங்கள் அன்பையும் நம்பிக்கையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம். இவ்வாறு தார் மீடியா நிறுவனம் கூறியுள்ளது.