மகாராஷ்டிரா சட்டசபை பாஜக குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை பாஜக குழுவின் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் 105, 56 இடங்களைக் கைப்பற்றின. இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.
ஆனால் முதல்வர் பதவி, அமைச்சர்களின் துறைகள் உள்ளிட்ட விவகாரங்களில் முடிவு எட்டப்படவில்லை. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், தாமே மீண்டும் முதல்வர்; 5 ஆண்டுகாலம் பாஜகவின் ஆட்சிதான் என திட்டவட்டமாக கூறி வருகிறார்.
இதனை சிவசேனா ஏற்க மறுத்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கிறது சிவசேனா.
வெளிநாட்டுக்கு சென்றார் ராகுல் காந்தி- ஒருவாரம் 'முகாம்'
சிவசேனாவுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில் நாளை அல்லது நாளை மறுநாள் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மும்பையில் பாஜகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டசபை பாஜக குழுவின் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் திட்டமிட்டபடி நாளை அல்லது நாளை மறுநாள் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என தெரிகிறது.