எதிர்ப்பு, பரபரப்பு, வழக்குகளுக்கு மத்தியில் மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்றார் தேவேந்திர பட்னவீஸ்
Recommended Video
மும்பை: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் பொறுப்பேற்றார்.
மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்தும் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கவில்லை. பாஜகவும சிவசேனாவும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்த்த வேளையில் ஆட்சியில் பங்கு கேட்டு சண்டையிட்டது சேனா.
இதையடுத்து பாஜக, சிவசேனா, என்சிபி ஆகிய கட்சிகளை ஆட்சி அமைக்க அழைத்தும் முடியாததால் நவம்பர் 11-ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் என்சிபி- காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்தது.
சனிக்கிழமை அன்று அதாவது கடந்த 23-ஆம் தேதி ஆளுநரை சந்தித்து ஆதரவு கடிதத்தை கொடுக்கலாம் என அந்த கூட்டணி முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. என்சிபியின் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சியில் அமர்ந்தது.
முதல்வர் தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் ரகசியமாக பதவியேற்றுக் கொண்டனர். அன்று மாலையே குடியரசுத் தலைவர் ஆட்சியும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளன.
அது தொடர்பான வழக்கு நேற்று நடந்த நிலையில் இன்றும் தொடர்கிறது. இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் முதல்வராக தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் இன்றும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.