சீட் பிடிக்க இப்படியா!.. ரத்தம் சொட்ட சொட்ட.. மின்சார ரயிலில் அடித்து உருண்ட பெண்கள்..பரவும் வீடியோ
மும்பை: மும்பையில் ஓடும் மின்சார ரயிலில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்கள் ரத்தக்கறை வரும் அளவுக்கு மோதிக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, சென்னை போன்ற நகரங்களுக்கு புறநகர் ரயில் நகரவாசிகளின் பயணத்திற்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.
தினமும் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் என பல தரப்பினருக்கும் மின்சார ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
மும்பை மின்சார ரயில்
குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியும் என்பதால் பயணிகள் அதிக அளவில் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர். இதனால், பீக் நேரங்களில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். அதுவும் மும்பையை பற்றி சொல்லவே வேண்டாம். கடல் போல பயணிகள் ரயில்வே பிளாட்பார்மில் கூடி நிற்பர். ரயில் வருவதற்கு ஒரு நிமிடம் தாமதம் ஆனால் கூட போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ரத்தம் கொட்டும் அளவுக்கு மோதல்
பெண் பயணிகளுக்காக புறநகர் ரயில்களில் தனி பெட்டியும் உண்டு. பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி இத்தகைய பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இதிலும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில், மும்பையின் தானே - பன்வெல் லோக்கல் மின்சார ரயிலில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ரத்தம் கொட்டும் அளவுக்கு பெண் பயணிகள் இடையே கடும் சண்டை நடைபெற்றது. சக பயணி ஒருவர் இந்த மோதலை வீடியோ எடுத்துள்ளார்.
தலைமுடியை பிடித்து இழுத்து
அதில், பெண் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சண்டையிட்டு கொள்கின்றனர். ஆக்ரோஷமாக ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு கடும் சண்டை நடக்கிறது. ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து மோதிக்கொள்கின்றனர். ஆக்ரோஷமாக பெண்கள் சத்தமிட்டுக்கொண்டு பயங்கரமாக மோதிக்கொள்கின்றனர். அப்போது சண்டையை நிறுத்த பெண் காவலர் ஒருவர் வருகிறார். ஆனால் அவரும் தாக்கப்படுகிறார்.
4 பேர் காயம்
இதனால், தலையில் விழுந்த அடியுடன் சக பெண் காவலர்களுக்கு போன் செய்வது போல தெரிகிறது. சிறிது நேரத்தில் இரண்டு பெண்களின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெண் பயணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த மோதலில் ஒரு போலீஸ் உள்பட 4 பேர் காயம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
யார் உட்கார்வது என்பதில் தகராறு
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், ''துர்பே ரயில் நிலையத்தில் இருக்கை காலியாக இருந்துள்ளது. அப்போது ஏற்கனவே இருக்கையில் அமர்ந்து இருந்த பெண் ஒருவர், மற்றொரு பெண்ணுக்கு அமர இடம் கொடுத்து இருக்கிறார். மற்றொரு பெண் பயணியும் அதே இருக்கையில் அமர முற்பட்டு இருக்கிறார். யார் உட்கார்வது என்பதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால், வாக்கு வாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.