தகுதிநீக்க நோட்டீஸால் பதறிய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள்! உச்சநீதிமன்றத்தில் மனு! இன்று விசாரணை!
மும்பை: மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் 16 பேருக்கு தகுதிநீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தடைக்கோரி அவர்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல் அமைச்சராக உள்ளார்.
இந்த கூட்டணியின் ஆட்சி மீது சிவசேனாவின் எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனாவின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர்.
சசிகலா பாணியில் ஓபிஎஸ்ஸை ஓரம்கட்ட முடிவு? அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தின் பரபர பின்னணி
அசாமில் அதிருப்தி எம்எல்ஏக்கள்
ஏக்நாத் ஷிண்டேவுடன் 37 சிவசேனா எம்எல்ஏக்களும், 9 சுயேச்சை எம்எல்ஏக்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறினாலும் அதிருப்தியாளர்கள் கண்டுக்கொள்ளவில்லை.
நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
இந்நிலையில் தான் உத்தவ் தாக்கரே தனது கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். மேலும் ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நேற்று மகாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
தகுதிநீக்க நோட்டீஸ்
இதன் தொடர்ச்சியாக நேற்று 16 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபை துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஜூன் 27 ம் தேதி(இன்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் அளிக்காத பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை பாயலாம்.
தடைக்கோரிய மனு இன்று விசாரணை
இதனால் முன்னெச்சரிக்கையாக இன்று அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே சார்பில் நேற்று மாலை 6.30 மணியளவில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தகுதி நீக்க நோட்டீசுக்கு தடை கோரப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் பட்டியலிடப்பட்டது. அதன்படி அதிருப்தி எம்எல்ஏக்களின் மனு இன்று(திங்கட்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.