எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஓட்டல் முன்பு சிவக்குமார் உருக்கம்.. அனுமதி மறுப்பால் உச்சகட்ட பரபரப்பு
Recommended Video
மும்பை: ராஜினாமா கடிதம் அளித்துவிட்டு பாஜகவின் பாதுகாப்பில் மும்பையில் ஓட்டலில் உள்ள எம்எல்ஏக்களை சந்திக்க கர்நாடக அமைச்சர் டிகே சிவகுமார் வந்துள்ளார். அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளதால் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.
கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10எம்எல்ஏக்கள் மற்றும் 3 மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் சபாநாயகரின் செயலாளரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மாயமாகினர். இந்த ராஜினமா கடிதத்தை ஏற்றால் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 103 ஆக குறைந்துவிடும். அதேநேரம் பாஜகவின் பலம் சுயேட்சைகளின் ஆதரவுடன் 107 ஆக உயரும் என்பதால் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும்.
எனவே அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்வதற்காக அவர்கள் தங்கியுள்ள ரெனைசன்ஸ் மும்பை கன்வென்சன் சென்டர் நட்சத்திர ஓட்டலுக்கு கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமார் வந்துள்ளார்.
அவரை ஓட்டலுக்குள் நுழைய மகாராஷ்டிரா மாநில போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதன் காரணமாக அங்கு உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.
ஓட்டலுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், "என்னுடைய நண்பர்கள் இந்த ஓட்டலில் தங்கி உள்ளார்கள்: நான் இந்த ஓட்டலில் ரூம் புக்கிங் செய்ய வந்துள்ளேன்: எங்களுக்குள் சிறிய பிரச்னை, அதனை நாங்கள் பேசி தீர்க்கப்போகிறோம். நாங்கள் உடனே ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என வெட்டிக்கொண்டு செல்ல முடியாது" என்றார்.
மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, இதில் மிரட்டல் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளோம் என்றும் புரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார். சிவக்குமார் ஓட்டல் முன்பே இருப்பதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது.