ஹோட்டலுக்குள் விடவில்லை, கைது செய்தனர், பிளேன் ஏற்றி பெங்களூர் அனுப்பினர்! ஷாக்கில் டி.கே.சிவகுமார்
Recommended Video
மும்பை: அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த சென்ற கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமாரை, கைது செய்த மும்பை போலீசார், அவரை விமான நிலையம் வரை கொண்டு சென்று பெங்களூர் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக அதிருப்தி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் மொத்தம் 14 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இன்று சுதாகர் மற்றும் நாகராஜு ஆகிய இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் இந்த எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.
அதில் சுமார் 11 பேர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர். இவர்களை எப்படியாவது சந்தித்து மீண்டும் தங்கள் பக்கமே அழைத்து வந்துவிட வேண்டும் என்பதற்காக, கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான டி கே சிவகுமார் இன்று மும்பை ஹோட்டலுக்கு சென்றார்.
தடுத்து நிறுத்தம்
முன்னதாக அவர் ஆன்லைன் மூலமாக அந்த ஹோட்டலில் அறை புக் செய்திருந்தார். அதை சிவகுமார்தான் புக் செய்தார் என்று தெரியாமல் ஹோட்டல் நிர்வாகம் அறையை புக் செய்து இருந்தது. ஆனால் இன்று காலை சிவகுமார் ஹோட்டலுக்குள் நுழைய முற்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது ஆன்லைனில் புக் செய்த விபரத்தை அவர் காண்பித்தார். இதனால் ஹோட்டல் நிர்வாகம் திடீரென அவரது முன்பதிவை ரத்து செய்துவிட்டது.
நகர மாட்டேன்
இருப்பினும் ஹோட்டலுக்கு வெளியே கொட்டும் மழையில் சிவகுமார் மற்றும் அவருடன் சென்ற சில காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏக்கள் காத்திருந்தனர். இது பற்றி நிருபர்களிடம் சிவக்குமார் கூறுகையில், மழை பெய்தாலும், இடி விழுந்தாலும், நான் செத்தே போனாலும், இந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை. காவல்துறையை வந்து குவித்த என்னை அப்புறப்படுத்த நினைத்தாலும் அது முடியாது. பிறக்கும்போதும் ஒருவனாக வந்தேன், இறக்கும்போதும் ஒருவனாக போவேன். நடுவே எந்த ஒரு மிரட்டலுக்கும் பயப்படும் ஆள் நான் கிடையாது. நான் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன்.
திடீர் கைது
எனது நண்பர்களை சந்திக்க வந்துள்ள என்னை தடுக்க நினைத்தால், திரும்பிப் போகப்போவது கிடையாது என்று கறாராக தெரிவித்தார். மழைக்கு நடுவேயே, அவர் காலை சிற்றுண்டி சாப்பிட்டார். இதன்பிறகும், அங்கேயே அவர் காத்திருந்தார். ஆனால் மதியம் சுமார் 2.30 மணிக்கு, சிவகுமாரை வலுக்கட்டாயமாக மும்பை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். அவருடன் வந்த பிற எம்எல்ஏக்களை கைது செய்யவில்லை. ஹோட்டலை சுற்றிலும் 144 தடை உத்தரவை மும்பை போலீசார் பிறப்பித்துள்ளனர்.
பெங்களூர் விமானம்
இதன்பிறகு மாலை சுமார் 6 மணியளவில், சிவகுமாரை போலீசார் விடுதலை செய்தனர். ஆனால் பெங்களூருக்கு செல்ல வேண்டும் என உத்தரவிட்டனர். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய சிவகுமார், "மும்பை காவல்துறையினரின் செயல்பாடு வெட்கப்படக்கூடியது. ஜனநாயக நாட்டில் இப்படி நடக்குமா? நான் இங்கே இருந்தார் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என கூறும் காவல்துறையினர் ஏர்போர்ட் வரை என்னை அழைத்துச் சென்று பெங்களூர் அனுப்ப உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் மனது மாறும்வரை நான் இங்கேயே இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், மும்பை பாஜக அரசின் காவல்துறை, இப்படி ஜனநாயக விரோத நடவடிக்கையை எடுத்துள்ளது" என்றார் சிவகுமார்.