தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்கள் செல்லும்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. ரிசர்வ் வங்கி
மும்பை: தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களுமே செல்லத்தக்கது தான். எனவே மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. இதனையடுத்து பெட்டி கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை குறிப்பிட்ட நாணயங்களை மக்களிடமிருந்து வாங்க மறுத்தனர்.
தனியார் தான் இப்படி செயல்பட்டனர் என்றால் திருப்பூர் போக்குவரத்துப் மண்டல மேலாளர் தனபால் வெளியிட்ட சுற்றறிக்கையில், பேருந்தில் பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களை முடிந்தவரை தவிர்க்க அறிவுறுத்தியிருந்தார்.
மேலும் அவ்வாறு தவிர்க்க முடியாதபட்சத்தில் வழித்தடத்திலேயே பேருந்தில் ஏறும் மற்ற பயணிகளுக்கு, 10 ரூபாய் நாணயங்களை மீதி சில்றை என்ற வகையில் வழங்க வேண்டும். அனைத்து நடத்துனர்களும் இதனை கவனத்தில் கொள்ளுமாறு கூறியிருந்தார்.
போக்குவரத்து மண்டல மேலாளரின் இந்த அறிவிப்பு குறித்த தகவல், தமிழகம் முழுக்க பரவியது. இதனையடுத்து 10 ரூபாய் நாணயங்களை வைத்திருக்கும் மக்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினர். எங்கு சென்றாலும் அந்த நாணயங்களை வாங்க அனைவருமே மறுத்தனர்.
இதனிடையே 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை தவிர்க்கச் சொல்லிய போக்குவரத்து மண்டல மேலாளர் தனபால், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற பிரச்சனை நிலவியது. இதனையடுத்து மக்களிடம் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில் தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே அதை வாங்க யாரும் மறுப்பு தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் நாணயங்களை வாங்கி கொள்ள வேண்டும். இதனை அனைத்து வங்கிகளும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளது.
மேலும் ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பொருளாதாரம், சமூகம், கலாசாரம் போன்ற பல்வேறு கருப்பொருளை மையமாக வைத்து நாணயங்களை வெளியிட்டு வருகிறேம். இவ்வாறு வெளியிடப்படும் நாணயங்கள் நீண்ட கால புழக்கத்தில் இருக்கும். அதே நேரத்தில் பல புதிய வடிவங்களில், புதிய உருவங்களில் தொடர்ந்து நாணயங்கள் வெளியிடப்படும்.
ஆனால் நாட்டின் பல பகுதிகளில் குறிப்பிட்ட நாணயங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கிளப்பப்படுகிறது. இதனால் வியாபாரிகள், மக்கள் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற பயத்தில் சட்டப்படி செல்லும் நாணயங்களையே வாங்க மறுப்பதாக என்ற தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களுமே சட்டப்படி செல்லுபடியாகும். எனவே அவற்றை வங்கி கொள்வதில் யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். மேலும் நாணயங்களை மாற்ற வரும் பொதுமக்களை வங்கிகள் திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது