சொல்லுங்க ஹசாரே... நீங்க யார் பக்கம்... கேள்வி எழுப்பும் சிவசேனா
மும்பை : விவசாயிகளுக்காக போராட போவதாக அறிவித்த அன்னா ஹசாரே, அதனை வாபஸ் பெற்றது ஏன் ? இந்த விவகாரத்தில் அவரது நிலைப்பாடு பற்றி விளக்க வேண்டும் என மகாராஷடிராவில் ஆளும் கட்சியான சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே, தான் விவசாயிகளுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக நேற்று அறிவித்தார். நான் 3 ஆண்டுகளாக விவசாயிகள் பிரச்னைகள் பற்றி குரல் எழுப்பி வருகிறேன். ஆதார உற்பத்தி விலையை 50 சதவீதம் உயர்த்தவும் அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தேன் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றார்.
இதனை அறிவித்த சிறிது நேரத்திலேயே மூத்த பாஜக தலைவர்கள் சிலர் ஹசாரேவை சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே, தான் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஹசாரேவின் இந்த நிலைப்பாடு பற்றி அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஹசாரேவின் ஆதரவு யாருக்கு :
இது பற்றி சிவசேனாவின் கட்சி நாளேடான சாம்னாவில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், விவசாயிகள் போராட்டத்தில் ஹசாரே முன் நிற்பார் என நினைக்கப்பட்டது. ஆனால் அவர் பின் வாங்கி, நிலைப்பாட்டை மாற்றியது ஏன் என தெரியவில்லை. வேளாண் சட்டங்கள் பற்றி ஹசாரே என்ன நினைக்கிறார். டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை ஆதரிப்பாரா. அவரை பின்வாங்க வைத்து யார். குறைந்தபட்சம் மகாராஷ்டிராவிற்காவது அவர் விளக்குவாரா.
பாஜக.,வுடன் விளையாட்டு :
வயதான விவசாயிகள் மாநில எல்லையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஹசாரேவும் சென்று அமர வேண்டும். ராலேகான் சித்தியில் அமர்ந்து கொண்டு பாஜக தலைவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை சென்று ஹசாரே பார்த்தது ஏன். இது மோடிக்கு எதிரான போராட்டமாக இருந்தால் ஹசாரே வெளிப்படையாக அதில் பங்கேற்பாரா.
பாஜக.,வுக்கு எதிராக வாய் திறக்கவில்லை :
கடந்த 7 ஆண்டுகளாக பாஜக விலைவாசியை கடுமையாக உயர்த்தி உள்ளது. 3 முறை டெல்லி சென்ற ஹசாரே இது ஏதும் பேசவில்லை. எதிர்க்கவும் இல்லை. அப்படியானால் அவர் காங்கிரசை எதிர்த்து மட்டும் தான் போராட்டம் நடத்துவாரா. பாஜக.,வை எதிர்த்து போராட மாட்டாரா. அரசியல் கட்சிகள் அவரை பயன்படுத்திக் கொள்ள பார்க்கின்றன. ஹசாரே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
விவசாயிகள் என்ன கிரிமினல்களா :
விவசாயிகள் பிரச்சனை என்பது தேச பிரச்னை. இந்த போராட்டத்தை அரசு சிதைக்க முயற்சிக்கிறது. காசிபூரில் தண்ணீர், மின்சாரத்தை அரசு நிறுத்தி உள்ளது. விவசாயிகளை சர்வதேச கிரிமினல்களை போல் அரசு நடத்துகிறது. அவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அவர்கள் என்ன பொருளாதார குற்றவாளிகளா. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.