இந்துத்துவத்தை பற்றி.. யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.. சட்டசபையில் கர்ஜித்த உத்தவ் தாக்கரே
மும்பை: காஷ்மீரில் பிரிவினைவாதிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தவர்கள் பாஜக என்று விமர்சித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, இந்துத்துவத்தைப் பற்றி யாரும் சிவசேனாவுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்றும் கடுமையாகச் சாடினார்,
மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாதி காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளார்.
இந்நிலையில், அவர் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டம் முதல் இந்துத்துவ கொள்கைகள் வரை பாஜக எதிலும் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று அவர் சாடியுள்ளார்.
கற்றுத் தர தேவையில்லை
இது குறித்து மகாராஷ்டிர நாடாளுமன்றத்தில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, "இந்துத்துவ கொள்கைகள் குறித்து பாஜக ஒன்றும் எங்களுக்கு கற்றுத் தர தேவையில்லை. வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளோம். இந்தியாவில் பிரதமரும் அவரது குழுவுமே பாரத் ரத்னாவை வழங்குகிறது. ஆனால் வீர் சாவர்க்கருக்கு இன்னும் பாரத ரத்னா விருதை வழங்கவில்லை" என்றார். சிவசேனா கட்சி இந்துத்துவ கொள்கைகளிலிருந்து விலகி வருவதாக பாஜகவின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக உத்தவ் தாக்கேர பேசினார்.
முள் வேலிகள்
தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசிய அவர், "எல்லையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய முள்வேலிகள் போராடும் விவசாயிகளுக்கும் டெல்லிக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அவர்கள் எல்லையில் எடுத்திருந்தால் சீனா ஊடுருவியிருக்காது. போராடும் விவசாயிகளை எல்லாம் பயங்கரவாதிகள் என்று பாஜக கூறுகிறது. நாடு என்பது ஒன்றும் பாஜகவின் தனி சொத்து இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
இரட்டிப்பாகியுள்ள எரிபொருள் விலை
மீண்டும் பாஜகவை தாக்கி பேச தொடங்கிய அவர், "சிவசேனா கட்சி நாட்டின் விடுதலை போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் தான் பாஜகவின் தாய் அமைப்பும் விடுதலை போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எனவே, பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிடுவது மட்டுமே நாட்டின் மீது நீங்கள் வைத்திருக்கும் காதலை நிரூபிக்காது. விவசாயிகளை நடு ரோட்டில் போராடவிடும் உங்களுக்கு பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட உரிமை இல்லை. மேலும், பாஜக வாக்குறுதி அளித்ததைப் போல விவசாயிகள் தங்கள் வருமானம் இரட்டிப்பாகும் என்று காத்திருக்கின்றனர். ஆனால், இங்கு எரிபொருள் விலைதான் இரட்டிப்பாகியுள்ளது" என்றார்.
ராமர் கோயில்
மேலும், மகாராஷ்டிராவை இரண்டாகப் பிரிக்கும் முடிவை பாஜக கைவிட வேண்டும் என்றும் அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். மத்தியில் பாஜக 6 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தும் அயோத்தி ராமர் கோயிலுக்கு ஒரு சட்டத்தைக்கூட இயற்றவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் மட்டுமே தற்போது ராமர் கோயில் கட்ட முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், காஷ்மீரில் பிரிவினைவாதிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தவர்கள் பாஜக என்றும் இதனால் சிவசேனாவின் இந்துத்துவ கொள்கைகள் பற்றி கேள்வி எழுப்பு பாஜகவுக்கு உரிமை இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.