பீரியட்ஸ் நாளில் கூலி இழப்பை தவிர்க்க.. கருப்பையை அகற்றும் மகா. பெண்கள்.. ராமதாஸ் வேதனை
கருப்பையை அகற்றும் பெண்களுக்கு ஊதியம் தர ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்
மும்பை: பீரியட்ஸ் நாட்களில் கூலி இழப்பை தவிர்க்க.. மகாராஷ்டிர கரும்பு கூலி பெண் தொழிலாளிகள் கருப்பையை அகற்றும் நிலைமைக்கு ஆளாகி உள்ளனர்.. இந்த கொடுமையை தவிர்க்க வேண்டும் என்றும், மாதவிலக்கு காலங்களில் அரசு ஓய்வுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய மகாராஷ்டிராவில் உள்ள பகுதி மராத்வாடா பிராந்தியம்.. இங்கு ஏராளமான கரும்புத் தொழிலாளிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தான்.. பொதுவாக மாதவிடாய் காலங்களில் இந்த பெண்கள் யாரும் வேலைக்கு போவது கிடையாது.. அதனால், அவர்களுக்கு கூலி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது சம்பந்தமாக அம்மாநில அமைச்சர் நிதித் ராவுத் முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், "பெண்களுக்கு இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்காக அவர்கள் தங்கள் கருப்பையை அகற்றி விடுகின்றனர்.. இதுபோன்று சுமார் 30,000 பெண்கள் தங்கள் கருப்பையை அகற்றி கொள்கின்றனர்.
இந்த பெண்களுக்கு மாதவிடாய் காலமான 4 நாட்களுக்கும் கூலி வழங்க சர்க்கரை ஆலைகள் முன்வந்தால் அவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள்.. இது சம்பந்தமான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்" என்று அமைச்சர் கேட்டுக் கொண்டிருந்தார்.
மங்களூரு துப்பாக்கிச் சூடு- பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ5 லட்சம்: மமதா- எடியூராப்பா மீது அட்டாக்
அமைச்சரின் கோரிக்கையும், அது சம்பந்தமான பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், கரும்பு வெட்டும் கூலி வேலை செய்யும் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கூலி இழப்பை தவிர்க்க தங்களின் கருப்பையை அகற்றிக் கொள்வதாக அமைச்சர் சொல்லி இருந்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இது பேசுபொருளாகவும் உருவெடுத்துள்ளது.
மராட்டியத்தில் மாதவிலக்கு நாட்களில் கூலி இழப்பை தவிர்க்க கரும்பு வெட்டும் பெண் தொழிலாளிகள் கருப்பையை அகற்றி கொள்வதாக அம்மாநில அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.இத்தகைய கொடுமைகளை தடுக்க பெண் தொழிலாளர்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அரசு ஓய்வுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) December 26, 2019
இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்திலும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், "மராட்டியத்தில் மாதவிலக்கு நாட்களில் கூலி இழப்பை தவிர்க்க கரும்பு வெட்டும் பெண் தொழிலாளிகள் கருப்பையை அகற்றி கொள்வதாக அம்மாநில அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய கொடுமைகளை தடுக்க பெண் தொழிலாளர்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அரசு ஓய்வுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.