ஷாரூக் இதை செய்தால் மட்டும் போதும்.. போதை மருந்தெல்லாம் சர்க்கரை பவுடராகிவிடும்!.. மகா அமைச்சர்
மும்பை: போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யான் கானின் தந்தை ஷாரூக் கான் பாஜகவில் இணைந்துவிட்டால் போதை மருந்தெல்லாம் சர்க்கரை பவுடராகிவிடும் என மகாராஷ்டிரா அமைச்சர் சக்கான் புஜ்பால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா கடற்கரையில் அக்டோபர் 3ஆம் தேதி கோவாவைச் சேர்ந்த கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த கப்பல் பயணிகளை ஏற்றிக் கொண்டு நடுக் கடலுக்கு சென்ற பிறகு இங்கு போதை பொருள் பார்ட்டி நடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்புப் பிரிவினருக்கு புகார்கள் வந்தன.
நெருங்கும் பண்டிகைகள்.. சுற்றுலா, ஷாப்பிங் செல்வதை தவிர்க்கவும்.. மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மாறு வேடத்தில் பயணிகள் போல் டிக்கெட் பெற்றுக் கொண்டு அந்த கப்பலுக்குள் சென்றனர். அப்போது கப்பல் சிறிது தூரம் சென்றவுடன் சிலர் போதை பொருட்களை வைத்திருந்ததை கண்டனர்.
20 பேர்
உடனே அவர்களை சுற்றி வளைத்தனர். சுமார் 20 பேரை கைது செய்தனர். அந்த 20 பேரில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கானும் ஒருவராவார். இவரது செல்போனை ஆராய்ந்ததில் இவருக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதை அறிந்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் மனு தள்ளுபடி
அவரை ஜாமீனில் எடுக்க இரு முறை மனுதாக்கல் செய்தும் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மகனுக்கு ஜாமீன் பெற்று விட ஷாரூக் கான் முயற்சித்து வருகிறார். இதனிடையே நடிகை அனன்யா பாண்டேவிடம் இருந்து ஆர்யான் கான் கஞ்சா வாங்கி பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மும்பை
இந்த நிலையில் ஷாரூக் கானின் மும்பை வீட்டிலும் அனன்யா பாண்டே வீட்டிலும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இன்னும் சிலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
ஷாரூக்கான்
இந்த நிலையில் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த மாநில அமைச்சர் சக்கான் புஜ்பாலிடம் ஷாரூக் கான் மகன் குறித்த வழக்கு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு புஜ்பால் கூறுகையில், இந்த வழக்கெல்லாம் வேண்டுமென்றே புனையப்பட்ட வழக்கு. ஷாரூக் கான் பாஜகவில் இணைந்துவிட்டால், உடனே ஆர்யான் கான் சிக்கிய போதை பொருள் வழக்கு சர்க்கரை பவுடராகிவிடும் என தெரிவித்துள்ளார். பாஜகவில் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். அந்த முயற்சியாக மும்பையில் பாஜகவை மலர வைக்க ஷாரூக் கானை தங்கள் கட்சியில் இணைக்க வைக்க இது ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.