பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க ஜெகன்மோகன் ரெட்டியின் திஷா சட்டம்.. ஏக்நாத் ஷிண்டே உறுதி
மும்பை: பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க ஜெகன்மோகன் ரெட்டியின் திஷா சட்டம் மகாராஷ்டிராவிலும் கொண்டு வரப்படும் என உள்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மேலவையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
உணர்வுப்பூர்வம்
அப்போது உள்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசினார். அவர் கூறுகையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதில் அரசு உணர்வுப்பூர்வமாகவும் தீவிரமாகவும் இருக்கிறது.
பயமில்லாமல்
பெண்கள் பயமில்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதற்காக பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தூக்கு தண்டனை விதிக்கப்படும் வகையில் ஆந்திரா போல் சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
என்கவுன்ட்டர்
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் பெண் மருத்துவர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புதிய சட்டம்
இதையடுத்து ஆந்திரத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக செயல்பட்டு இனி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஒரு வாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு 21 நாட்களில் தூக்கு தண்டனை விதிக்கப்படும் வகையில் புதிய சட்டத்தை ஆந்திர மாநிலத்தில் கொண்டு வந்தார்.