மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் 15 நாளுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது.. சரத் பவார் ஆருடம்
மும்பை: மக்களவை தேர்தலுக்கு பின் மோடி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தாலும், அந்த ஆட்சி 13 முதல் 15 நாட்களுக்குள் கவிழ்ந்துவிடும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆருடம் கூறியுள்ளார்.
மராத்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர், மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் இடங்கள் கிடைக்கும் என கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகளின்படி தேசிய ஜனநாயக கூட்டணி தேவைப்படும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறாவிட்டாலும் கூட, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மீண்டும் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுப்பார் என சரத் பவார் தெரிவித்தார்.
மோடி அல்லாத பாஜக அரசுக்கு திமுக ஆதரவு தரும்? பரபர சந்திப்புகள் சொல்வது என்ன?
குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று மோடி ஆட்சி அமைத்தாலும் கூட, கடந்த 1996-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு ஏற்பட்ட நிலைதான் மோடிக்கும் ஏற்படும். 13 முதல் 15 நாட்களுக்குள் மோடி அரசு கவிழ்ந்து விடும். பாரதிய ஜனதாவிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணி மே 21-க்குள் இறுதிவடிவம் பெற்றுவிடும் என்றார் சரத்பவார்.
பாரதிய ஜனதாவிடம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை வழங்க நாட்டு மக்கள் விரும்பவில்லை. மறைந்த ராஜீவ் காந்தி பற்றி மோடி தெரிவித்த கருத்துக்களால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
பா.ஜ தலைவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தலில் 300 இடங்கள் கிடைக்கும் என்று பேசி வருகிறார்கள். இவ்வாறு பேசுவதன் மூலம் மக்களை மட்டுமல்லாது, அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா எதிர்பாராத தோல்வியை சந்திக்கும். 8 மாதங்களுக்கு முன் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பறி கொடுத்தது போலவே மத்தியிலும் ஆட்சியை பாரதிய ஜனதா பறிகொடுக்கும் என சரத் பவார் தெரிவித்துள்ளார்