உழைத்தது போதும்... ஆளை விடுங்க சாமி... பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்..!
மும்பை: பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக்கொள்வதாக கடிதம் கொடுத்திருக்கிறார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட்.
கட்சிக்காக உழைக்க காத்திருந்த தனக்கு தலைமை உரிய அங்கீகாரம் தரவில்லை என்ற புகாரை அவர் முன்வைத்துள்ளார்.
பல மாநிலங்களிலும் பலரும் பாஜகவை தேடி வந்து இணையும் சூழலில், அந்தக் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் விலகியிருப்பது தேசிய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜன சங்கம்
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் ஜன சங்க அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ஜெய்சிங் ராவ் கெய்க்வாட், பாஜகவில் மாவட்ட மற்றும் மாநில இளைஞரணி செயலாளர், மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர், மத்திய கனிமவளத்துறை இணை அமைச்சர், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
அங்கீகாரம் இல்லை
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக தனக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை எனக் கூறி இப்போது பாஜகவிலிருந்து விலகியிருக்கிறார் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட். இதனிடையே தனது விலகல் முடிவு குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி வழியாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், தாம் எம்.எல்.ஏ. சீட்டோ, எம்.பி.சீட்டோ மீண்டும் எதிர்பார்க்கவில்லை என்றும் கட்சியை வலிமைப்படுத்தும் வகையில் பணியாற்ற மேலிடத்தின் அங்கீகாரத்தையே எதிர்பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.
சந்திரகாந்த் படேல் மறுப்பு
பாஜகவில் தனக்கான மரியாதையை தலைமை அளிக்கும் என 10 ஆண்டுகளாக காத்திருந்து விட்டதாகவும் இனியும் அந்த நம்பிக்கை தனக்கு இல்லாததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார். இதனிடையே ஜெய்சிங் ராவ் கெய்க்வாட் முன்வைக்கும் இந்தப் புகாரை மஹராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் படேல் மறுத்துள்ளார்.
ஆளுங்கட்சி
மத்தியில் பாஜக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில் பலரும் அந்தக் கட்சியில் இணைவதற்காக படையெடுத்து வரும் நிலையில் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட்டின் இந்த நடவடிக்கை மேலிடத் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஜெய்சிங் ராவ்முடிவின் பின்னணியில் சிவசேனா இருப்பதாக பாஜக சந்தேகிக்கிறது.