மும்பையில் செம ஷாக்... 4,6 & 14 வயதான குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு... கண்கள் அகற்றம்
மும்பை: கருப்பு பூஞ்சை பாதிப்பு காரணமாக 4,6 மற்றும் 14 வயதான மூன்று குழந்தைகளின் ஒரு கண்ணை மும்பையை சேர்ந்த மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர்.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை கடந்த சில மாதங்களாகவே பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது.
அதேபோல முதல் அலையில் முதியவர்களுக்கு அதிகம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இரண்டாம் அலையில் இளைஞர்கள் மற்றும் சிறார்கள் கூட கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
கருப்பு பூஞ்சை பாதிப்பு
மேலும், இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பும் ஏற்பட்டது. கொரோனா சிகிச்சையில் நோயாளிகளுக்கு ஆன்டிபாடி மருந்துகள் அதிகம் அளிக்கப்பட்டன. இது அவர்களின் உடலிலிருந்த நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்தது. இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு எளிதாகக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. மேலும், நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம் ஏற்பட்டது.
மூன்று சிறார்கள்
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வெறும் 4,6 மற்றும் 14 வயதான குழந்தைகளுக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மும்பையில் இரு வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 14 வயதுடைய குழந்தையைத் தவிர மற்ற இருவருக்கு நீரிழிவு பாதிப்பு இல்லை. இருப்பினும், அவர்களுக்குக் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேறு வழியின்றி மூன்று சிறார்களின் ஒரு கண் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண்கள் அகற்றம்
இது குறித்து மூத்த மருத்துவர் ஜெசல் ஷெத் கூறுகையில், கொரோனா 2ஆம் அலையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் எங்களிடம் வந்தார்கள். அவர்களில் ஒரு சிறுமிக்கு (14 வயது), 48 மணி நேரத்தில் கண்கள் கருப்பு நிறத்தில் மாற தொடங்கியது. மூக்கிற்கும் கருப்பு பூஞ்சை பரவ தொடங்கியது. நல்ல வேளையாக அது மூளைக்குப் பரவவில்லை. அந்தச் சிறுமிக்கு ஆறு வாரங்கள் சிகிச்சை அளித்தோம். அவரது உயிரைக் காப்பாற்ற ஒரு கண்ணை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
16 வயது சிறுமி
இவர்கள் மூவரைத் தவிர மற்றொரு 16 வயதுடைய சிறுமியும் எங்களிடம் வந்தார். அவருக்கு நீரிழிவு நோய் இல்லாமல் இருந்தது. ஆனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவுடன் அவருக்கு திடீரென நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டது. அவரது குடலில் ரத்தப்போக்கு ஏற்படத் தொடங்கியது. கருப்பு பூஞ்சை அவரது வயிற்றின் அருகில் ரத்த நாளங்களைப் பாதித்துள்ளதைக் கண்டறிந்தோம். இதனால் அவருக்கு ஆஞ்சியோகிராஃபி செய்தோம்" என்றார்.
உயிரிழப்பு ஏற்படலாம்
கருப்பு பூஞ்சை பாதித்த திசுக்களையும் உயிரற்ற திசுக்களையும் உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் அது தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை மூலம் திசுக்கள் அகற்றப்படும். சரியான நேரத்தில் இவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.