மும்பை சிட்டி சென்டர் மாலில் பயங்கர தீ விபத்து... 3,500 பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றம்..!
மும்பை: மும்பையில் உள்ள பிரபல மால்களில் ஒன்றான சிட்டி சென்டரில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
மும்பை தெற்கு பகுதியில் உள்ள நகபடா என்ற இடத்தில் சிட்டி சென்டர் மால் இயங்கி வருகிறது. வணிக வளாகமான இந்தக் கட்டிடத்தை ஒட்டி 55 அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சிட்டி சென்டரில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தால் பாதுகாப்பு காரணங்களுக்கு 3,500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படை வீரர்கள் 24 தீயணைப்பு படை வாகனங்களை கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதில் பொதுமக்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் ஏற்படாத நிலையில் தீயணைப்புப் படை வீரர்கள் இருவருக்கு மட்டும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிட்டி சென்டர் மாலில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து நகபடா போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது முன் விரோதம் காரணமாக யாரேனும் சதிச்செயல்களில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மும்பை மாநகர மேயர் கிஷோரி பேட்னகர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.