மும்பை தாஜ் ஓட்டல் அருகே உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. ஒருவர் பலி
மும்பை: பொருளாதார தலைநகரான மும்பையில் உள்ள பிரபல தாஜ் ஓட்டலுக்கு அருகே அமைந்துள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மும்பை மாநகரம் கொலாபா பகுதியில் அமைந்துள்ள பிரபல தாஜ்மஹால் நட்சத்திர ஓட்டலுக்கு அருகில் அமைந்துள்ளது, சர்ச்சில் சேம்பர் என்ற அடுக்குமாடி கட்டிடம்.
இந்த கட்டிடத்தில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சர்ச்சில் சேம்பர் கட்டிடத்தின் 3-வது மாடியில் லெவல் -2 பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Mumbai: One person has lost his life, one injured, in fire that broke out on the 3rd floor of Churchill Chamber building on Merryweather Road near Taj Mahal Hotel in Colaba today. https://t.co/Cy2wkk35UN
— ANI (@ANI) July 21, 2019
தீ விபத்தையடுத்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீப்பிடித்த கட்டிடத்தில் சிக்கியிருந்த 15-க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.