ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலில் திடீர் தீ விபத்து... ஒருவர் பலி என தகவல்
மும்பை: தயாரிப்பு நிலையில் இருந்த ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் உள்ள மசகன் டக்ஸ் நிறுவனத்தில், தற்போது கட்டுமானத்தில் உள்ள 'ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம்' போர்க்கப்பலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக, தீயை அணைக்க எட்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.
மாலை 5.44 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து கடற்படையினரும், தீயை கட்டுப்படுத்தினர். முறையான விசாரணைக்கு பின்னர் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என கூறபபடுகிறது. இரண்டாவது தளத்தில் பற்றிய தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவி, போர்க்கப்பல் புகை மண்டலமானது.
இதே போல், கடந்த ஏப்ரல் மாதம், இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா' விமானம்தாங்கி போர் கப்பல், கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் துறைமுகத்துக்குள் நுழைந்தபோது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப்பற்றியது.
அங்கிருந்த உபகரணங்களை வைத்து தீயை போராடி அணைத்தவர்களில் ஒருவரான லெப்டினன்ட் கமாண்டர் டி.எஸ்.சவுகான் பலத்த தீக்காயங்களுடன் அருகாமையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு இந்திய கடற்படை அதிகாரிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.