முதல்ல அயோத்தியில் கோவில்... அப்புறம் மகாராஷ்டிராவில் புதிய அரசு.. சிவசேனாவின் சஞ்சய் ராவத்
மும்பை: அயோத்தியில் முதலில் ராமர் கோவில் கட்ட வேண்டும். அதன்பிறகு மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்போம் என சிவசேனாவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்த போதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை சிவசேனா வலியுறுத்தி வருகிறது. லோக்சபா தேர்தலின் போது தமது கட்சி எம்.பி.க்களுடன் அயோத்திக்கு செல்வோம் என அறிவித்திருந்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
இதனையடுத்து ஜூன் மாதம் அயோத்திக்கு சென்றார் உத்தவ் தாக்கரே. அப்போது பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்தியிருந்தார்.
தற்போது அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பை வரவேற்றுள்ள உத்தவ் தாக்கரே, இதற்கு மத்திய அரசு உரிமை கோர முடியாது என்றார்.
இதனிடையே சிவசேனாவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தமது ட்விட்டர் பக்கத்தில், முதலில் கோவில்.. பிறகு அரசு.. அயோத்தியில் கோவில்... மகாராஷ்டிராவில் புதிய அரசு.. ஜெய் ஶ்ரீராம் என பதிவிட்டுள்ளார்.