அடுக்குமாடி குடியிருப்பு லிப்ட் கதவுக்கு இடையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு.. மும்பையில் சோகம்
மும்பை: மும்பை தாராவியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் கதவுகளுக்கு இடையே சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை தாராவியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு லிப்டில் சென்ற 5 வயது சிறுவன் ஹுசைஃபா லிப்டின் வெளி மற்றும் உள் கதவுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக ஷாஹு நகர் போலீசார் தற்செயலான மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஏதாவது அலட்சியம் இருந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
அடுக்குமாடி குடியிருப்பு
மும்பை தாராவியின் கிராஸ் ரோட்டில் உள்ள கோஸி ஹவுசிங் சொசைட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் 4வது மாடியில் முகமது ஹுசைஃபா சர்பராஸ் ஷேக் என்ற ஐந்து வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
நான்காவது மாடி
நேற்று மதியம் 12:43 மணிக்கு சிறுவன் ஹுசைஃபா தரை தளத்தில் இருந்து நான்காவது மாடியில் தனது வீட்டிற்கு தனது அக்கா மற்றும் தங்கையுடன் லிப்டில் ஏறினார். லிப்ட் நான்காவது மாடியை அடைந்ததும், சகோதரிகள் அவருக்கு முன் வெளியேறினர்.
கதவுக்கு இடையில்
அப்போது சிறுவன் முகமது ஹுசைஃபா சர்பராஸ் ஷேக், கடைசியாக லிப்டில் இருந்து வெளியே வந்து, இரும்பு கதவை மூடிக்கொண்டிருந்தார். அப்போது வெளிப்புறம் இருந்த மரக் கதவு திடீரென சிறுவன் ஹுசைஃபா மீது மூடியது. இரண்டு கதவுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் சிறுவன்.சிக்கி கொண்டான்.
நசுங்கி மயக்கம்
சிறுவன் ஹுசைஃபா உதவிக்காக கத்தி கூச்சலிட்டு வெளிப்புற மரக்கததை தட்டிக்கொண்டிந்தான். அப்போது லிப்ட் மேல் மாடிக்கு (ஐந்தாவது மாடிக்கு) திடீரென மேல்நோக்கி சென்றது. இதனால் சிறுவன் சுவர்களுக்கு இடையில் நசுங்கி மயங்கினான்.
தாய் பதற்றம்
அவரது சகோதரிகள் வீட்டிற்கு வந்தவுடன், அவர்களது தாய் அவர்களிடம் ஹுசைஃபா பற்றி கேட்டார். அவர் லிப்டில் இருப்பதாக அவர்கள் தாயிடம் சொன்னார்கள், ஆனால் லிப்ட் திரும்பியபோது அவர்கள் அவரை அங்கே காணவில்லை. பின்னர் தாயும் அக்கம் பக்கத்தினரும் குழந்தையைத் தீவிரமாக தேடத் தொடங்கினர். ஹுசைஃபா அடுக்குமாடி வளாகத்திற்கு வெளியே செல்வதை அவர் பார்க்கவில்லை என்று பாதுகாப்புக் காவலர் அவர்களிடம் கூறினார்.
குழந்தை உயிரிழப்பு
பின்னர் அவரது குடும்பத்தினர் லிப்டில் செல்லும் போது நான்காவது மற்றும் ஐந்தாவது மாடிக்கு இடையில் சுவரில் ரத்தம் இருப்பதைக் கவனித்தனர். தரை தளத்தில் உள்ள லிப்ட் குழாயில் அசைவற்ற நிலையில் ஹுசைஃபா காணப்பட்டார். அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தாராவி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.