அரியணை ஏறும் சிவசேனா.. முடி சூட மாட்டேன் என்று உறுதி எடுத்த தாக்கரே.. முரண்பாடுகளின் தலைவர்!
சரத்பவாரும், பால் தாக்கரேவும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்
Recommended Video
மும்பை: முரண்பாடுகளின் மொத்த உருவம் சிவசேனா என்றால் உண்மைதான். அத்தனை முரண்பாடுகளை உள்ளடக்கிய கட்சிதான் சிவசேனா. இந்துத்துவா மீது பாஜகவை விட மிகுந்த பிடிப்புள்ள ஒரு கட்சி எது என்றால் அது சிவசேனாதான். இன்று மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸுடன் இறுக கை கோர்த்து நிற்கிறது சிவசேனா.
இந்தியாவின் மறக்க முடியாத சில தலைவர்கள் வரிசையில் நிச்சயம் பால் தாக்கரேவை நிறுத்த முடியும். மகாராஷ்டிராவையும் தாண்டி இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தலைவர். மராத்தா பெருமையை பேசும் தாக்கரே.. காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக இரக்கம் காட்டியவர்.. அதேசமயம், மும்பையில் வசிக்கும் தென்னிந்தியர்கள், பிகாரிகள் உள்ளிட்டோர் மீது வெறுப்பையும் உமிழ்ந்தவர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து ஆடக் கூடாது என்று கர்ஜித்தவர். சிவசேனா தொண்டர்கள், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தையே சூறையாடினார்கள். வாங்கடே பிட்ச்சையும் கூட கொத்தி சேதப்படுத்தி சிதைத்தனர். அதே பால் தாக்கரேதான் தனது வீட்டுக்கு ஜாவேத் மியான்தத்தை விருந்துக்கு அழைத்து சாப்பிட வைத்து ரசித்து மகிழ்ந்தவர்.
அஜித் பவார் ஏன் இப்படி செய்தார்.. தேவேந்திர பட்னாவிஸ் சொன்ன பதில் இதுதான்!
முரண்பாடுகள்
பால் தாக்கரே என்றால் இப்படித்தான் என்று கணித்து சொல்லவே முடியாது. காரணம், அந்த அளவுக்கு முரண்பாடுகளுடன் கூடியவர். அவரை போலவேதான் அவரது கட்சியும்! சிவசேனா கட்சியின் கடந்து வந்த பாதையை பார்த்தாலே, அது பயணித்த விதத்தைப் புரிந்து கொள்ள முடியும். நாளை சிவசேனாவின் முதல் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்க போகிறார். இதனால், சிவசேனா கட்சியினர் ஒட்டுமொத்த குஷியில் உள்ளனர். இந்த நேரத்தில் நாம் பால் தாக்கரே குறித்து திரும்பி பார்ப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.
அன்னியோன்யம்
மனைவி மீனா தாய் தாக்கரே மீது மிகுந்த பிரியம் வைத்திருந்தார் பால் தாக்கரே. இவர்களது அன்னியோன்யம் மிகப் பிரசித்தி பெற்றது. மனைவி என்றால் அவ்வளவு உயிர் தாக்கரேவுக்கு. 1995ம் ஆண்டு மீனா தாக்கரே மறைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவரை புனேவிலிருந்து மும்பைக்கு சாலை மார்க்கமாக காரில் கூட்டி வந்து கொண்டிருந்தனர். அப்போது போக்குவரத்து நெருக்கடியில் கார் சிக்கியதால் விரைவாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் மீனா தாய் தாக்கரே மரணமடைந்தார்.
தம்பதி
மீனா தாய் தாக்கரேவின் மரணம் பால் தாக்கரேவை உலுக்கி விட்டது. "இனிமேல் நான் சாமியே கும்பிட மாட்டேன்... எல்லாத்தையும் விட்டுட்டேன்" என்று விரக்தியுடன் கூறினார். கடைசி வரை தனது மனைவியின் நினைவாகவே இருந்தார். பால் தாக்கரே மரணமடைந்தபோது அவரது உடல் வீட்டில் கிடத்தப்பட்டிருந்தது. அப்போது அவரது நெஞ்சில் மீனா தாக்கரேவின் புகைப்படத்தை வைத்திருந்தனர். அப்படி ஒரு இணக்கமான தம்பதிகளாக இருவரும் வாழ்ந்து மறைந்தனர்.
அமிதாப் பச்சன்
அதேபோல அமிதாப் பச்சன் உயிரைக் காத்தவர் பால் தாக்கரேதான் என்றால் நம்ப முடிகிறதா.. 1982ம் ஆண்டு. கூலி படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த விபத்து நேரிட்டது. பெங்களூர் ஷூட்டிங்கின்போது மேலிருந்து கீழே விழுந்து அடிபட்டார் அமிதாப் பச்சன். பலத்த அடி. உடனடியாக அவரை பெங்களூரிலிருந்து விமானம் மூலம் மும்பை கொண்டு வந்தனர். மும்பை விமான நிலையத்திலிருந்து பிரீச்கண்டி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அமிதாப் பச்சனை விரைவாக கொண்டு வந்து சேர்த்தனர். அந்த ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தவர் பால் தாக்கரேதான். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அமிதாப் பச்சனை கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுத்தவர் பால் தாக்கரே. இன்று வரை அதை நன்றியுடன் நினைவு கூர்ந்து பேசி வருகிறார் அமிதாப் பச்சன்.
முஸ்லீம்கள்
பால் தாக்கரேவுக்கு தென்னிந்தியர்கள் என்றாலே கொஞ்சம் கசப்புதான். அது அனைவருக்கும் தெரிந்ததுதான். அது மட்டுமல்ல பிகாரிகள், முஸ்லீம்கள் என்று அவரது வெறுப்புப் பட்டியல் சற்று நீளம்தான். இவர்கள் அனைவருமே சிவசேனா தொண்டர்களிடம் சிக்கி பட்ட அவஸ்தைகளை சொல்லி மாளாது. அப்படி ஒரு "பாசமான" மனுஷர்தான் பால் தாக்கரே. ஆனால் பால் தாக்கரே ஒரு மலையாளப் புத்தகத்திற்கு கார்ட்டூன் போட்டுக் கொடுத்தார் என்றால் நம்ப முடிகிறதா.. ! மலையாளத்தில் வெளியான நாடோடிக் கப்பலில் நாலு மாசம் என்ற புத்தகத்திற்கு கார்ட்டூன் உள்ளிட்ட படங்களை வரைந்து கொடுத்தவர் பால் தாக்கரே.
இரக்க சுபாவம்
சர்வாதிகாரத்தை அதிகம் ரசித்தவர், விரும்பியவர் பால் தாக்கரே. அவருக்கு ரொம்பப் பிடித்தவர் அடால்ப் ஹிட்லர். இதை அவரை பொது வெளியில் பலமுறை சொல்லியுள்ளார். தான் சொல்வதை செய்ய வேண்டும். தான் வைத்ததே சட்டம் என்ற எண்ணம் கொண்டவர் பால் தாக்கரே. அதேசமயம், இரக்க சுபாவத்தையும் அவர் வெளிப்படுத்த தவறியதில்லை. காஷ்மீரி பண்டிட்டுகளின் வாரிசுகளுக்கு மகாராஷ்டிராவில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டாயம் இடம் வழங்க வேண்டும் என்று உத்தரவே போட்டவர் பால் தாக்கரே.
சூளுரை
பால் தாக்கரேவுக்கு பல முகங்கள்.. சர்வாதிகாரம்.. கோபம், துவேஷம்.. ஆவேசம்.. பாசம்.. அன்பு.. நட்பு என்று ஒவ்வொரு உருவிலும் அவர் மகாராஷ்டிராவை தனது ஆளுமைக்குள் வைத்திருந்தார். கடைசி வரை சர்ச்சைகளை விட்டு விலகாமலேயே மறைந்த தலைவர் பால் தாக்கரே.. "எந்தக் காலகட்டத்திலும் நானோ எனது வாரிசுகளோ ஆட்சிப் பொறுப்பில் அமர மாட்டோம்" என்று சூளுரைத்தவர் அவர்.. ஆனால் அவரது வாரிசு நாளை ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறார்.. இதிலும் கூட முரண்பாடுதான் மிஞ்சியிருக்கிறது பாருங்களேன்!