பூரிக் கட்டையை சரியா வீசுறது பெரிசா?.. இல்லை தோசையை கரெக்ட்டா தட்டுல வீசறது பெரிசா?
மும்பை: தோசை வேண்டுமானால் நீங்கள் போய் வாங்க தேவையில்லை, உங்கள் தட்டுக்கே தோசை தானாக பறந்து வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எந்த துறையாக இருந்தாலும் அதில் புதுமையை புகுத்தினால் அதில் நல்ல வளர்ச்சி இருக்கும். அது போல் ஹோட்டல் தொழில்களில் ருசி, சுகாதாரத்துடன் புதுமை என்பது மிகவும் முக்கியமானதொன்று.
எத்தனையோ தள்ளுவண்டி கடைகளில் சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி கடையில் பறக்கும் தோசையை சாப்பிட்டிருக்கீர்களா?
வைரல் வீடியோ
ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபிஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் ஒரு வீடியோ ஷேர் செய்யப்பட்டது. அதில் உங்கள் தட்டிற்கே தோசை பறந்து வருகிறது. இந்த பறக்கும் தோசை வீடியோவை 8 கோடியே 40 லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர். மேலு்ம 13 லட்சம்பேர் லைக் போட்டுள்ளனர்.
மசால் தோசை
விறுவிறுப்பாக தோசை கல்லில் ஒரு இளைஞர் தோசை சுடுகிறார். அது ரெடியான பிறகு நேரடியாக வாடிக்கையாளரின் தட்டுக்கே வீசுகிறார். அதிலும் அவர் அந்த வாடிக்கையாளர் எங்கிருக்கிறார் என பார்க்காமலேயே வீசுகிறார். தோசையும் சரியாக தட்டில் வந்து விழுகிறது. அரிசிமாவை அரைத்து தோசைக் கல்லில் மாவை ஊற்றி, அதில் வெங்காயம் சேர்த்தால் வெங்காய தோசை, மசாலா சேர்த்தால் மசாலா தோசை என பல வகைகளில் தோசையை மக்கள் கண்டுபிடித்து சாப்பிட்டு வருகிறார்கள்.
வாடிக்கையாளர்கள்
என்னதான் இருந்தாலும் இது உணவிற்கும் வாடிக்கையாளருக்கும் செய்யும் அவமரியாதை என நெட்டிசன்கள் சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ அட்டகாசமாக அந்த பையன் வாடிக்கையாளர்களுக்கு தோசை பரிமாற அதை வானில் பறக்க விடுகிறார் என பலர் பாராட்டுகிறார்கள்.
தோசை வீச்சு
இந்த செயல் அவமரியாதை செயலோடு காற்றில் தோசையை வீசுவதால் அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் தோசையின் மீது ஒட்டிக் கொள்ளும் என சிலர் கூறியுள்ளார்கள். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி ஏராளமானோர் அந்த இளைஞரை பாராட்டி வருகிறார்கள். மும்பைவாசிகள் இந்த ஹோட்டல் இருக்கும் முகவரியை கேட்டு வருகிறார்கள்.