தாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்
மும்பை: என்னுடைய தாத்தாவின் சிந்தனைகளைப் பின்பற்றி செயல்பட்டவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார் வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு 21-ந் தேதி நடைபெற உள்ளது. இறுதி கட்ட பிரசாரங்கள் அனல் பறக்கின்றன.
மகாராஷ்டிரா மாநில பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைப்போம் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனை ஆதரித்து பேசிவரும் பாஜக தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, வீர சாவர்க்கரைப் போல இந்தியாவில் யாரும் தியாகம் செய்தது இல்லை; அவருக்கு பாரத ரத்னா விருது பொருத்தமானது என வலியுறுத்தி வருகிறார்.
வீரசாவர்க்கருக்கு எதிர்ப்பு
ஆனால் இடதுசாரிகளும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், மகாத்மா காந்தி கொலையில் தொடர்புடைய வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதா? அப்படியானால் நாளை தேசத்தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் என்பீர்களா? என கொந்தளிக்கின்றனர். நாடு முழுவதும் இது பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.
சித்தாந்தத்தை பின்பற்றி இந்திரா
இந்நிலையில் வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான் என் தாத்தாவின் சித்தாந்தங்களை செயல்படுத்தியவர்.
நேரு, காந்திக்கு எதிரானவை
வீர சாவர்க்கரை பின்பற்றியதாலே பாகிஸ்தானை மண்டியிடச் செய்தார் இந்திரா காந்தி. ராணுவத்தை வலிமைப்படுத்தினார்; வெளியுறவுக் கொள்கையை வலிமையாக்கினார். உச்சகட்டமாக அணு ஆயுத சோதனையும் நடத்தினார். இவை அனைத்தும் காந்தி, நேருவின் தத்துவங்களுக்கு எதிரானவை அல்லவா?.
வீர சாவர்க்கர் குற்றவாளி அல்ல
மகாத்மா காந்தி கொலை வழக்கில் என்னுடைய தாத்தா விடுதலை செய்யப்பட்டார். அப்போதைய அரசு, அப்போதைய பிரதமராக இருந்த நேரு கூட என் தாத்தாவின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை. மற்றொன்று கபூர் கமிஷன் பற்றி அனைவரும் பேசுகிறார். அதில் என்னுடைய தாத்தா மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது என்கின்றனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றமே முடித்தும் வைத்திருக்கிறது. இதற்கு மேலும் கபூர் கமிஷன் பற்றி நீங்கள் பேசினால் நீதித்துறை மீது நம்பிக்கை அற்றவர்கள் என்பதாகவே அர்த்தம்,
ஒருவரை அடையாளம் காட்டுங்க
தத்துவங்களைப் பற்றி மன்மோகன்சிங் பேசுகிறார். மகாத்மா காந்தியின் தத்துவத்தைப் பின்பற்றி எந்த காங்கிரஸ் கட்சிகாரர் செயல்படுகிறாரா? நான் சவால்விட்டு கேட்கிறேன்.. காந்தியின் கொள்கையைப் பின்பற்றி இந்திரா காந்தி செயல்பட்டார் என்பதற்கு ஏதேனும் ஒரு ஆதாரம் காட்ட முடியுமா? வீர சாவர்க்கர் மாமனிதர்.. அவருக்கு இந்திரா காந்தி மதிப்பலித்திருக்கிறார். பிரதமர் மோடியும் மதிப்பளிக்க விரும்புகிறார்.
விவாதிக்க வாருங்கள்...
எங்களிடம் வீரசாவர்க்கர் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதற்கான அனைத்து ஆவணங்களும் ஆதாரங்களும் இருக்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எங்களுடன் வெளிப்படையான விவாதத்துக்கு வர தயாரா? நீங்களே இடத்தையும் நேரத்தையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள். வீர சாவர்க்கருக்கு கொல்லைப்புறமாக பாரத ரத்னா விருது வழங்காதது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் மக்களின் எண்ணம் எதிரானதாக இருந்தால் பாஜகவுக்கு எதிராக அவர்கள் வாக்களிப்பார்கள். இவ்வாறு ரஞ்சித் கூறியுள்ளார்.