நடிகையை பார்க்க நேரம் இருக்கிறது, ஆனால் விவசாயிகளை பார்க்க நேரமில்லை... சரத் பவார் சரமாரி கேள்வி
மும்பை: மகாராஷ்டிரா இதுபோல ஒரு போல மோசமான ஆளுநரைப் பார்த்தே இல்லை என்றும் அவருக்கு நடிகை கங்கனா ரணாவத்தை பார்க்க நேரம் இருக்கிறது, ஆனால் விவசாயிகளைப் பார்க்க நேரம் இருப்பதில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விமர்சித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ளும் மாபெரும் பேரணி நேற்று நடைபெற்றது. நாசிக் நகரில் ஒன்றுகூடிய சுமார் 21 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அங்கிருந்து மும்பையை நோக்கி பேரணி நடத்தினர்.
நேற்று மாலை இந்த பேரணி மும்பை வந்தடைந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் மும்பையின் ஆசாத் மைதானத்தில் மற்றொரு பேரணியை விவசாயிகள் நடத்தினர். இந்தப் பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்துகொண்டார்.
பஞ்சாப் என்ன பாகிஸ்தானிலா உள்ளது?
ஆசாத் மைதானத்தில் அலை கடல் என திரண்டிருந்த விவசாயிகள் மத்தியில் பேசிய சரத் பவார், "குளிர், வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் சுமார் 60 நாட்களாகப் போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு சொல்கிறது. பஞ்சாப் மட்டும் என்ன பாகிஸ்தானிலா உள்ளது? அதுவும் நம் நாட்டின் ஒரு பகுதிதான்.
எங்களுக்கு ஆதரவாக நீங்கள்
நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்திய போதே எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டங்களை எதிர்த்தோம். நாடாளுமன்ற குழுவிடம் இதை முதலில் அனுப்பலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால், பாஜக அரசு பெரும்பான்மை இருந்ததால், எவ்வித விவாதமும் இன்றி இச்சட்டத்தை நிறைவேற்றியது. இன்று எங்களுடன்(விவசாயிகள்) நீங்கள் இருக்கிறீர்கள். முதலில் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள் அதன் பின் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
அரசையே கவிழ்க்க முடியும்
மகாராஷ்டிரா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொடர்ந்து பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடைபெற்ற ஒரு மாநிலம். இப்போது நடைபெறும் இந்த விவசாயிகளின் போராட்டமும் இதன் நீட்சியே. இந்த அரசு விவசாயிகளை அழிக்க நினைத்தது. ஆனால், இப்படிப்பட்ட அரசையே கவிழ்க்க முடியும் என்பதை நீங்கள் அவர்களுக்குக் காட்டியுள்ளார்கள்"என்றார்.
நடிகை பார்க்க நேரம் இருக்கிறது
மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட்டம் உச்சம் பெற்றுள்ள நிலையில் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யரி தற்போது கோவாவுக்குச் சென்றுள்ளார். ஆளுநரின் இந்தச் செயலையும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், "மகாராஷ்டிரா இதுபோன்ற ஒரு ஆளுநரைப் பார்த்தே இல்லை. நீங்கள் அனைவரும் ஆளுநரைப் பார்க்கச் செல்கிறீர்கள். ஆனால், அவருக்கு நடிகை கங்கனா ரணாவத்தை பார்க்கத் தான் நேரம் இருக்கிறது, விவசாயிகளைப் பார்க்க நேரம் இருப்பதில்லை" என்றார்.
விவசாய சட்டங்கள்
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது இந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுக் கடந்த இரண்டு மாநிலங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் நாளை குடியரசு தினத்தில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தவுள்ளனர்.