நவ.7-க்குள் புதிய அரசு அமையாவிட்டால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி?
மும்பை: மகாராஷ்டிராவில் நவம்பர் 7-ந் தேதிக்குள் புதிய அரசு அமையாவிட்டால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக பாஜக மூத்த தலைவரும் மாநில நிதி அமைச்சருமான சுதிர் முங்கண்டிவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் 24-ந் தேதி வெளியாகின. கடந்த ஒரு வார காலமாக பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
105 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜகவுக்கு 56 இடங்களில் வென்ற சிவசேனாவின் ஆதரவு கட்டாயம் தேவை. ஆனால் சிவசேனாவோ சுழற்சி முறையில் முதல்வர் பதவி என ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டதை ஏற்க வேண்டும் என வலியுறுத்தியது.
மிரட்டிய சிவசேனா
இதற்கும் பாஜக உடன்படாத நிலையில், அந்த கட்சியின் ஆதரவு இல்லாமலே ஆட்சியை அமைத்துவிடுவோம் எனவும் மிரட்டுகிறது. இந்த மிரட்டல் கருத்தை வெளியிட்ட சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரையும் சந்தித்து பேசியிருந்தார்.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி?
இந்நிலையில் மராத்தி டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மூத்த பாஜக தலைவரும் மாநில நிதி அமைச்சருமான சுதிர் முங்கண்டிவார், நவம்பர் 7-க்குள் புதிய ஆட்சி அமைக்காவிட்டால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாக வாய்ப்பிருக்கிறது என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சுதிர் முங்கண்டிவார் கூறியதாவது:
கூட்டணிக்குதான் வாக்களிப்பு
மகாராஷ்டிரா தேர்தலில் மக்கள் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சி அமைக்க வாக்களிக்கவில்லை. ஆனால் பாஜக-சிவசேனாவை உள்ளடக்கிய மகா கூட்டணிக்குத்தான் வாக்களித்திருக்கின்றனர். எங்களது கூட்டணி ஃபெவிக்கால் அல்லது அம்புஜா சிமெண்ட் கலவையைவிட மிக வலிமையாகவே இருக்கிறது.
எதனால் முட்டுக்கட்டை?
புதிய அரசு மிக விரைவில் அமையும் என எதிர்பார்க்கிறேன். உரிய நேரத்தில் புதிய அரசு அமையாவிட்டால் ஜனாதிபதி ஆட்சி அமலாக வாய்ப்பிருக்கிறது. சிவசேனா கட்சி, இரண்டரை ஆண்டுகளுக்கு தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என கேட்பதால்தான் முட்டுக்கட்டை நீடிக்கிறது.