கங்கனா... நீங்க செஞ்சது ரொம்ப தப்பு... எச்சரிக்கும் நீதிமன்றம்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திற்கு மும்பை பாலி ஹில் பகுதியில் இருக்கும் 16 மாடி குடியிருப்பின் 5ஆவது மாடியில் 3 வீடுகள் உள்ளன.
இந்த வீடுகளை முறைகேடாக மாற்றும் பணிகளில் கங்கனா ஈடுபட்டதாகக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பை மாநகராட்சி இந்த வீடுகளின் ஒரு பகுதியை இடித்து தள்ளியது.
இதை எதிர்த்து கங்கனா தொடர்ந்த வழக்கைக் கடந்த வாரம் புறநகர் டிண்டோஷியில் உள்ள நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த தீர்ப்பில் கார் பகுதியில் இருக்கும் தனது வீடுகளை கங்கனா, முறையான அனுமதியின்றி மாற்றியமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கங்கனா பொது பாதையின் இடங்களையும் அவரது வீட்டிற்காகப் பயன்படுத்திக்கொண்டார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "ஏற்கனவே, மும்பை மாநகராட்சி அனுமதி அளித்த ஒரு கட்டுமான திட்டத்தை கங்கனா அனுமதியின்றி மாற்றியமைத்துள்ளார். இது கடுமையான விதி மீறலாகும் "என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கங்கனா ரணாவத் கார் பகுதியில் இருக்கும் இந்த 3 வீடுகளையும் ஒரே வீடாக மாற்றும் பணியை மேற்கொண்டார். ஆனால், மும்பை மாநகராட்சியிடம் இருந்து உரிய அனுமதியை பெறாமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை மாநகராட்சி கங்கனாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், இந்தக் குடியிருப்புகளை மீண்டும் பழைய நிலைக்கே மாற்றும்படியும் இல்லையென்றால் கட்டடம் இடிக்கப்படும் என்றும் மும்பை மாநகராட்சி மற்றொரு நோட்டீஸ் அனுப்பியது.
மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதற்குத் தடை விதிக்கும்படி, கங்கனா நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். இருப்பினும், தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கங்கனாவின் வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.