மகாராஷ்டிராவில் இருந்து ஊர் திரும்பும் தொழிலாளர்களை மாநிலத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் குஜராத்
மும்பை: மகாராஷ்டிராவில் இருந்து திரும்பும் தங்களது மாநில தொழிலாளர்களை மாநிலத்துக்குள் அனுமதிக்கப் போவது இல்லை என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தொரட் கூறியுள்ளார்.
பிற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்கும் தொழிலாளர்களுக்கான கட்டணத்தை செலுத்த காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது.
இப்படி சிறப்பு ரயில்களில் செல்ல முடியாதவர்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை என நடந்தே செல்கின்றனர். இப்படி நடந்து சென்றவர்கள் அயர்ந்து தண்டவாளத்தில் உறங்கியபோதுதான் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் சரக்கு ரயில் மோதியது. இதில் 17 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மூத்த காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தொரட் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்கான தொகையை செலுத்த மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசு தயாராக உள்ளது. ஆனால் குஜராத் மாநில அரசு தங்களது மாநில தொழிலாளர்கள் தங்களது மாநிலத்துக்கு வர அனுமதி இல்லை என கூறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அடங்காத கோயம்பேடு கேஸ்கள்.. தினமும் விரட்டும் கொரோனா கிளஸ்டர்.. விடைதெரியாத சில கேள்விகள்!
மேலும் குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த 1200 தொழிலாளர்கள் மகாராஷ்டிராவில் தவிக்கின்றனர். அவர்களை அனுமதிக்கப் போவதில்லை என குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி கூறியிருக்கிறார் என்றும் தொரட் பதிவிட்டிருக்கிறார். ஏற்கனவே மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருவதை அனுமதிக்க முடியாது என கூறியிருக்கின்றன. இப்போது குஜராத்தும் இதே பல்லவியை பாடுகிறது.
மகாராஷ்டிராவில் இருந்து 65 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 70,000 தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே Save Life Foundation என்ற அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், லாக்டவுன் காலத்தில் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் 42 தொழிலாளர்கள் இதுவரை மரணித்துள்ளதாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.